இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. 

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 14ம் தேதி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைகிடமாக இருப்பதாகவும், அவர் ஐசியூவிற்கு மாற்றப்பட்டு செயற்கை சுவசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனையடுத்து நேற்று இயக்குநர் பாரதிராஜா தலைமையில் திரையுலகினர், இசைப்பிரபலங்கள் மற்றும் இசைப்பிரியர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டு பிரார்த்தனை நடத்தினர். சரியாக 6 மணிக்கு தங்களது வீடுகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களை ஒளிக்கவிட்டு, இறைவனிடம் அவர் உடல் நலம் பெற வேண்டுமென வேண்டிக்கொண்டனர். 

தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.பி.பி. ரசிகர்களும், குறிப்பாக ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்களும் வீதிகளில் மெழுகுவர்த்தி ஏந்தி எஸ்.பி.பாலசுப்ரமணியம் நலமடைய வேண்டுமென பிரார்த்தனை செய்தனர். ஒட்டுமொத்த தமிழகமும் எஸ்.பி.பி. மீண்டு வர வேண்டுமென பிரார்த்தனை செய்தது. 

இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. எக்மோ மற்றும் செயற்கை சுவாசக் கருவிகள் மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ரு வருவதாகவும், மருத்துவ நிபுணர் குழுவினர் எஸ்.பி.பி. உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்களது கூட்டு பிரார்த்தனைக்கு கிடைத்த வெற்றியை எண்ணி திரையுலகினரும், ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.