எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்... மருத்துவமனை வெளியிட்ட பகீர் அறிக்கை...!
இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் இருந்து அறிக்கை வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி ரசிகர்களின் மனதை குளிர வைத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சீராகி வந்த அவருடைய உடல் நிலை திடீரென கடந்த 14ம் தேதி கவலைக்கிடமானது. தற்போது எஸ்.பி.பி.க்கு வென்டிலேட்டர் சப்போர்ட் உடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவக்குழுவினரும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
எஸ்.பி.பி. பூரண குணமடைந்து பழைய படி மீண்டு வர வேண்டுமென ரஜினிகாந்த், கமல் ஹாசன், இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நாளை காலை 6 மணிக்கு எஸ்.பி.பி. நலம் பெற வேண்டி கூட்டு பிரார்த்தனை நடத்தவும் இயக்குநர் பாரதிராஜா கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு பெப்சி உள்ளிட்ட திரைப்பட அமைப்புகள் மற்றும் திரைத்துறையினரிடம் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது.
இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் இருந்து அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளது. அவர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவி ஆகியவற்றின் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையை நிபுணர் மருத்துவர் குழு கூர்ந்து கவனித்து வருகிறது. அவரது vital parameters தற்போது திருப்தி அளிக்கும் வகையில் இருக்கிறது என்று கூறியிருக்கின்றனர்.