என்னால் சிரிக்கக்கூட முடியல….அவ்வளவு வேதனை…புற்று நோயால் பாதிக்கப்பட்ட சோனாலி பிந்த்ரே உருக்கம்…..
கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே தனக்கு அளிக்கப்பட்ட கீமோ சிகிச்சைக்குப் பிறகு சிரிப்பது கூட ரணம் மிகுந்ததாக இருந்ததாக உருக்கமாக கூறியுள்ளார்.
காதலர் தினம் படத்தில் நாயகியாக நடித்த நடிகை சோனாலி பிந்த்ரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது தன்னுடைய உற்சாகமான புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிடும் அவர், நேற்று புற்றுநோயிலிருந்து தான் நம்பிக்கையுடன் மீண்டு வருவதாக பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், "கடந்த இரண்டு மாதத்தில் எனக்கு சில நல்ல நாட்களும் இருந்தன. மோசமான நாட்களும் இருந்தன. சில நாட்களில் எனது விரல்களை மேலே உயர்த்தும் போது கூட எனக்கு ரணம் மிகுந்த வலி இருந்தது. இது ஒரு சுழற்சி என்பதை அறிந்தேன் என குறிப்பிட்டுள்ளார்..
உடல் வலியில் இருந்து ஆரம்பித்து அதன்பிறகு மன வலியை அனுபவிக்க வேண்டும். நிறைய மோசமான நாட்கள் இருந்தன. கீமோ சிகிச்சைக்குப் பின்னரான நாட்களை அவ்வாறு சொல்லலாம். அந்த சமயத்தில் சிரிப்பது கூட ரணம் மிகுந்ததாக இருக்கும் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் நான் போராடிக் கொண்டிருந்தேன். இது கடினமான போராட்டமாக இருந்தாலும் அர்த்தமுள்ளதாக இருந்தது. இதுபோன்ற கடினமான நாட்களை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் யாருக்காகவும் போலியாகவும், சந்தோஷமாக இருப்பது போல் நடிக்க அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..
கீமோ சிகிச்சைக்கு பின்னர் எனது விருப்பமான உணவை சாப்பிடுவது என்னுடைய மகனுடன் பேசுவது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக சோனாலி தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு என்னுடைய சிகிச்சை தொடர்கிறது. இப்போது உடல் நலம் தேறி வீடு திரும்புவதே என் இலக்கு. வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொண்டிருக்கிறேன் என சோனாலி பிந்த்ரே பதிவிட்டுள்ளார்.