தமிழக அரசின் கொரோனா விழிப்புணர்வு வீடியோவில் சிவகார்த்திகேயன் - சத்யராஜ்..!
கொரோனா விழிப்புணர்வு வீடியோவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது, இந்த வீடியோவில் நடிகர் சிவகார்த்திகேயன், சத்யராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த, மே 10 ஆம் தேதி முதல், 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதிலும், கொரோனா தொற்றால் தினமும் தமிழகத்தில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 30 ,000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருவது மக்களை அச்சமடைய செய்துள்ளது.
இந்நிலையில் கொரோனா விழிப்புணர்வு வீடியோவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது, இந்த வீடியோவில் நடிகர் சிவகார்த்திகேயன், சத்யராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இருவருமே நடிப்பை தாண்டி பல்வேறு சமூக விழிப்புணர்வு விஷயங்களிலும், மக்கள் அக்கறையிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் சிவகார்த்திகேயன் இந்த வீடியோவில் பேசியுள்ளதாவது, "கொரோனா பெருத்தொற்று வேகமாக பரவி நமக்கெல்லாம் அச்சுறுத்தலாக இருப்பது மட்டும் இல்லாமல் நிறைய உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுப்பதற்காக தமிழக அரசும், சுகாதார துறையும் நிறைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் நிறைய விதிமுறைகளை நமக்கு கூறி இருக்கிறார்கள் அதில் சில வற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு தான் இந்த வீடியோ என தெரிவித்துள்ளார்.
அதில் மிக முக்கியமானது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது. 'நான் என் முதல் டோஸை' எடுத்து கொண்டேன். வீட்டை விட்டு மிக மிக அவசியம் என்றால் மட்டுமே வெளியே வர வேண்டும். அப்படி வெளியே வரும்போது சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். நம் கைகளை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும். அதை அனைத்தையும் விட மிக முக்கியமானது வெளியில் போகும் போது மாஸ்க் அணிய வேண்டும். இது எல்லாமே உங்களுக்கு தெரிந்தது தான். அதே நேரத்தில் இது அனைத்தையும் கடைபிடிக்க வேண்டியது நம் கடமை.
அதே நேரத்தில் கொரோனா பற்றிய எந்த ஒரு பயமும் இல்லாமல், தன்னுடைய குடும்பத்தை மறந்து...நாம் அனைவருக்காகவும் கொரோனாவை எதிர்த்து போரிட்டுக்கொண்டு இருக்கிற முன் களப்பணியாளர்களுக்கு நாம் செய்கிற மரியாதையும் அதுவாகத்தான் இருக்கும். நாம் எல்லோரும் நினைத்தால் விரைவில் இதில் இருந்து மீண்டு வருவோம். கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இவரை தொடர்ந்து நடிகர் சத்யராஜ் கூறியுள்ளதாவது... நாம் அமரும் இடம், மற்றும் நம் அறையை சுத்தமாக வைத்து கொள்வது அவசியம். கூடுதலாக ஒரு விஷயத்தை சொல்லி கொள்ள நினைக்கிறன். நம் குடும்பங்கள், மற்றும் உறவினர்கள் குடும்பங்களில் நடக்கும் நல்ல விஷயங்கள் மற்றும் துக்ககரமான விஷயங்களில் கலந்து கொள்ளவில்லை என்றால் ஊர் என்ன நினைக்கும் , சொந்தக்காரர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை மறந்து, அழைப்பு விடுக்கும் போதே... வீட்டில் இது போன்ற விசேஷம் இருக்கு தயவு செய்து வராதே அது தான் உனக்கும் நல்லது எல்லோருக்கும் நல்லது. இப்படி சொன்னால் கூப்பிட்டு செல்லாமல் இருக்கும் குற்ற உணர்வுகள் வராது.
மருத்துவரின் ஆலோசனை படி கண்டிப்பாக தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள், வாஸ்ட்ஸ் ஆப் போன்ற செயலிகளில் வரும் எதிர்மறையான தகவல்களை கண்டுகொள்ளாமல், முறையாக மருத்துவரின் ஆலோசனை படி தான் நடக்க வேண்டும். சிறப்பாக அரசு அமைந்துள்ளது. அவர்கள் மக்களுக்காக சிறப்பான களப்பணி ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள். இந்த பணியில் அவர்களுடன் மனம் கோர்க்கவேண்டிய நேரம் இது, கொரோனாவை வென்று, உலகிற்கே தமிழகம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என தன்னுடைய விழிப்புணர்வு வீடியோவில் கூறியுள்ளார்.