கொரோனா லாக்டவுன் காரணமாக வாடி வரும் நடிகர், நடிகைகளுக்கு பிரபலங்கள் பலரும் உதவி வருகின்றனர். 

தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ். முருகன் கொரோனா ஊரடங்கால் பணி இன்றி தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிக, நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததோடு அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தனது சொந்த செலவில் 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதையடுத்து நடிகை ஜெயசித்ரா 200க்கு மேற்பட்ட நடிகர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிலையில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து வாடும் நடிகர்களுக்கு உதவும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு லட்சமும் ரூபாயும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ.50 ஆயிரமும், நடிகை லதா ரூ.25 ஆயிரமும் , நடிகர் விக்னேஷ் ரூ.10 ஆயிரமும் வழங்கியுள்ளனர். 

இவை அனைத்தும் நேரடியாக நடிகர் சங்க வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டது. மேலும் தமிழகம் முழுக்க இருக்கும் நாடக நடிகர்களுக்கு உதவும் வகையில் அந்தந்த பகுதி பிரமுகர்களைக் கொண்டு உதவவும் பூச்சி முருகன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக மதுரை நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பைக்கரா பி.சசிதேவா அவர்கள் 150க்கு மேற்பட்ட உறுப்பினர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.