தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் சித்தார்த் (Siddharth), பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சித்தார்த் (Siddharth) அரசியல் ரீதியாக பல கருத்துக்களை கூறி அவ்வப்போது சிக்கலில் சிக்கிக்கொள்கிறார். அதனால் அவர் மீது கடும் விமர்சனங்களை முன்வைப்பவர்கள் ஏராளம். அதே நேரத்தில் முன்பை விட இவருக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகவே உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காமல், முடிந்த வரை தான் தேர்வு செய்து நடிக்கும் படங்களில் வித்தியாசம் காட்டி வருகிறார். அந்த வகையில், கடைசியாக இவர் நடிப்பில் ‘மகா சமுத்திரம்’ படம் வெளியானது. தற்போது தெலுங்கில் ஒரு படம் உட்பட தமிழில் டக்கர், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் சித்தார்த், பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது. அவர் அந்த பதிவில், “ஒரு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் தரவுகள் குறித்து பொய்யான தகவல் வெளியிடுவதற்கு எவ்வளவு கமிஷன் வாங்குகிறீர்கள்?. பாக்ஸ் ஆபிஸ் தகவல் குறித்து தயாரிப்பாளர்கள் காலம் காலமாக பொய் கூறி வருகிறார்கள். 

ஆனால் தற்போது வர்த்தக பணியாளர்கள், மீடியாக்கள் என பலரும் போலியாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்களை அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து வருகிறார்கள். எல்லா மொழிகளும், அனைத்து தொழில்களும் இதே நிலை தொடர்கிறது. பான் இந்தியா நேர்மையற்றது” என பதிவிட்டுள்ளார். 

சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் ஒரே வாரத்தில் 229 கோடி ரூபாய் வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். அதனை விமர்சிக்கும் விதமாக தான் சித்தார்த் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.