"ரவுடிகளை வைத்து இனி மிரட்ட மாட்டேன்" - கையெடுத்து கும்பிட்ட இயக்குனர் ஷங்கர்
எந்திரன் 2.0 படப்பிடிப்பில் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு இயக்குநர் ஷங்கர் பகிரங்கமாக மன்னிப்பு தெரிவித்துள்ளார்.
ஷங்கரின் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவாகி வரும் 2.0 திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதற்கிடையே திருவல்லிக்கேணியில் இப்படத்தின் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது நாளிதழ் ஒன்றின் புகைப்பட செய்தியாளர் ஒருவர் அக்காட்சிகளை படமாக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆவேசமடைந்த திரைப்பட தயாரிப்புக் குழு, அப்பத்திரிகையாளரை தாக்கினர். இதனைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 2.0 பட இயக்குநர் பப்பு என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் ஷங்கரின் உறவினர் என்றும் கூறப்படுகிறது..
இதற்கிடையே சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இயக்குநர் ஷங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நிகழ்ந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். பத்திரிக்கையாளர் தாக்கப்பட்ட போது தாம் அங்கு இல்லை என்றும், இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் செயல்படுவோம் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரினை திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.