பாலியல் தொழில் செய்யச்சொல்லி வற்புறுத்தும் இயக்குனர்... கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை தீக்குளிக்க முயற்சி
serial actress Bhairavi : கட்டாய தாலி கட்டி, மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, டிஜிபி அலுவலகம் முன், சின்னத்திரை நடிகை ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலுார் மாவட்டம் கஸ்பா என்கிற பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி என்கிற பைரவி. 37 வயதாகும் இவர் சின்னத்திரை சீரியல்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். ஏற்கனவே திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ள இவருக்கு விவாகரத்தும் ஆகிவிட்டது. இந்த நிலையில் ராஜாதேசிங்கு என்பவர் நடிகை பரமேஸ்வரியிடம், திரைப்பட இயக்குனர் என சொல்லி அறிமுகம் ஆகியுள்ளார்.
பின்னர் நாளடைவில் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருக்கமான நிலையில் பரமேஸ்வரியிடம் ஆசைவார்த்தை கூறி கோயிலுக்கு கூட்டிச்சென்ற ராஜா தேசிங்கு, அங்கு அவருக்கு கட்டாய தாலி கட்டி மனைவி ஆக்கி உள்ளார். பின்னர் பணத்திற்காக தன்னை பாலியல் தொழில் செய்ய வற்புறுத்துவதாகக் கூறி நடிகை பரமேஸ்வரி கடந்த சில நாட்களுக்கு முன்பு டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில், தனியாக வசித்து வந்த பரமேஸ்வரிக்கு ராஜா தேசிங்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். உன்னையும், உன் குழந்தைகளையும் கொன்றுவிடுவேன் என அவர் மிரட்டல் விடுத்ததை அடுத்து சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று புகார் அளிக்க வந்த பரமேஸ்வரி, திடீரென மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
இதையடுத்து அங்கிருந்த போலீசார் பரமேஸ்வரியை காப்பாற்றினர். துணை நடிகை ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Maniratnam : பிறமொழி படங்களின் வெற்றியைக் கண்டு தமிழ் சினிமா கவலைப்பட தேவையில்லை - இயக்குனர் மணிரத்னம்