தீப்பிடித்த சர்கார் திடீர் சமாதானத்தின் பின்னணி? பயமா? பணமா!
இதன் பின்னணி முழுக்க முழுக்க விஜய்தான்! என்று தாறுமாறாக தகவல் விரவி கிடக்கிறது. சர்கார் படம் முழுக்க முழுக்க தங்களைத்தான் குறிவைத்து கொல குத்து குத்தியிருக்கிறது என்பதை லேட்டாகத்தான் புரிந்து கொண்டது ஆளும் அ.தி.மு.க. வட்டாரம்.
தி.மு.க.வை துவைத்துத் துவம்சம் செய்யும் என்று ஏகத்துக்கும் எதிர்பார்க்கப்பட்ட சர்கார், ஆளும் அ.தி.மு.க.வை அடித்து நொறுக்கிவிட்டது. அதிலும், அங்கிட்டு இங்கிட்டு திரும்பாமல், செம்ம ஸ்ட்ரெய்ட்டாக ஜெயலலிதாவின் தலையிலேயே கைவைத்த கதையாக, அவரது இயற்பெயரான ‘கோமளவல்லி’ எனும் பெயரையே வில்லிக் கேரக்டருக்கு பயன்படுத்தி, ‘என்னா வில்லத்தனம்?’ என்று வாய் பிளக்க வைத்துவிட்டார்கள்.
இதன் பின்னணி முழுக்க முழுக்க விஜய்தான்! என்று தாறுமாறாக தகவல் விரவி கிடக்கிறது. சர்கார் படம் முழுக்க முழுக்க தங்களைத்தான் குறிவைத்து கொல குத்து குத்தியிருக்கிறது என்பதை லேட்டாகத்தான் புரிந்து கொண்டது ஆளும் அ.தி.மு.க. வட்டாரம். ரிலீஸாகி இரண்டாம் நாள்தான், செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சரான கடம்பூர் தன் சொந்த ஊரில் உட்கார்ந்து உருமல் பேட்டி கொடுத்தார்.
இதன் பின் தான் மெதுவாக தலைதூக்கின அ.தி.மு.க. தரப்பு எதிர்ப்புகள். முதலில் கோயமுத்தூரில்தான் தியேட்டர் முற்றுகை துவங்கியது. பின் சென்னையில் சர்கார் ஓடும் தியேட்டர்கள் சிலவை ‘கைவைப்பு’க்கு ஆளாகின. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். சட்டக் குழுவுடன் ஆராய்ந்து பேசி வழக்கு பதிவு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்!’ என்றார்.
வியாழன் இரவில் இயக்குநர் முருகதாஸ் வீட்டை நோக்கி போலீஸ் டீம் ஒன்று நகர, ‘முருகதாஸ் கைதாகிறார்!’ என்று கிளம்பியது ஒரு பீதி. அடுத்த இலக்கு ‘விஜய்தான்’ என்றார்கள். ஆங்காங்கே அ.தி.மு.க.வினர் விஜய் கட் அவுட்கள் மேல் கல்லெறிதல், பிளக்ஸ்களுக்கு பிளேடு போடுதல், போஸ்டரில் சாணியடித்தல் மாதிரியான கலை நயம் மிக்க எதிர்ப்பு முறைகளை காட்டினர். சும்மா இருக்குமா தளபதி தரப்பு? அவரது ரசிகர்கள் சிலர், அ.தி.மு.க. புள்ளிகளை முடிந்த வரையில் மெகா கேவலமாக பேசியும், அமைச்சர்களை ஒருமையில் திட்டித் தீர்த்தும் வீடியோ மெஸேஜ்களை ஓடவிட்டு வைரலாக்கினர். மொத்தத்தில் இரு தரப்பும் முறைத்து, உரசி முட்டி மோதலுக்கு முழு வீச்சில் தயாராகினர்.
சிம்பிளாய் சொல்வதானால், சட்ட ஒழுங்குக்கு சிக்கலாகுமோ? எனும் டவுட்டே சில இடங்களில் வருமளவுக்கு போனது நிலைமை. இந்த சூழலில் தயாரிப்பு தரப்பு - இயக்குநர் இருவரும் அமர்ந்து நீ...ண்ட நேரம் பேசி, ஆளும் தரப்பு சொன்னது போல் ‘சர்ச்சைக்குரிய’ காட்சிகளை நீக்கவும் முடிவெடுத்தனர். இதை நாயகனிடமும் சொல்லி, ஒப்புதல் கேட்டனர். சின்ன மெளனத்துக்குப் பின் அவரும் சம்மதித்து தலையசைத்தார்.
சர்ச்சை காட்சிகளை கத்தரித்தும், ‘கோமளவல்லி’ எனும் பெயரில் மியூட் பண்ணியும் திரையிட்டது தயாரிப்பு தரப்பு. ஆனாலும் அ.தி.மு.க. சைடில் சமாதானமாகவில்லை. ‘ஆட்சிக்கும், கட்சிக்கும் எதிரான வசனங்களை நீக்க வேண்டும்.’ என்று அவர்கள் குரல் கொடுத்த போது, ‘அப்படின்னா முக்கால்வாசி படத்தையும் வெட்டித்தள்ளணும். அதெல்லாம் முடியாது. இதுக்கு மேலே நீங்க எதிர்த்தால் அதை நாங்க சமாளிக்கிறோம்.’ என்று எகிறியது தயாரிப்பு தரப்பு. இதன் பின் ஏதேதோ நடந்தன, இரு தரப்பிற்கும் இடையில் சமாதான தூதுவர்களாகவும், புரோக்கர் டைப்பிலும் சிலர் செயல்பட்டனர். விளைவு, டாய் டூய்! என துள்ளிக் கொண்டிருந்த ஆளும் தரப்பு திடீரென அமைதியாகிவிட்டது.
காட்சிகளை வெட்டியதும், ம்யூட்டியதும் போதாது! என குதித்தவர்கள், திடீரென ஏன் அமைதியானார்களாம்? இதுபற்றி விசாரித்தபோது, இரண்டு தகவல்கள் கிடைத்தன. ஒன்று விஜய் பற்றிய பயம்! அதாவது “விஜய்க்கு ஏற்கனவே லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் செல்வாக்கின் உச்சத்தில் இருக்கிறார். இந்த நேரத்தில் அவரது படத்தை மேலும் இடித்து இடித்தோ அல்லது அவரை கைது செய்தாலோ, அவரது ரசிகர்கள் கொதித்து எழுந்துவிடுவார்கள்.
இதன் மூலம் அவர் இன்னும் மிகப்பெரிய நபராவார், அவரது செல்வாக்கு உயரவும், அவர் அரசியலுக்குள் நுழையவும் நாமே ரூட் போட்டுக் கொடுத்த கதையாகிவிடும். அதனால் இத்தோடு விட்டுவிடலாம்!” என்று சீனியர்கள் சிலர் இந்த விஷயத்தை அடக்கிவிட்டதாக தகவல். அதே வேளையில், மிகப்பெரிய அளவில் ‘கவனிப்புகள்’ நடத்தப்பட்டு சமாதான நிலை எட்டப்பட்டுவிட்டதாம். இல்லையென்றால் படத்தை ஓடவிடாமல் பெரும் சிக்கல்களை உருவாக்கி நட்டத்தை ஏற்படுத்திடும் திட்டத்தில் அரசியல் தரப்பு இருப்பதாக தயாரிப்பு தரப்பு ஸ்மெல் செய்திருந்தது என்கிறார்கள். இம்மாத இறுதியில் 2.0 ரிலீஸாகும் வரை வசூலில் அள்ளும் முடிவிலிருந்த சர்கார்! வேறு வழியில்லாமால் ‘கவனிப்பை’ நிகழ்த்தி கரெக்ட் செய்துவிட்டது என்கிறார்கள்.