"நடிச்சா நயன்தாரா கூடத்தான் நடிப்பேன்" - சரவணா ஸ்டோர் உரிமையாளர் பகீர் தகவல்
தி.நகர் சரவணா ஸ்டோருக்கு போனால், அம்மா அப்பாவை தவிர அனைத்தும் வாங்கலாம் என்று சொல்லும் அளவுக்கு, அனைத்து பொருள்களையும் ஒரே இடத்தில் வாங்கிவிட முடியும்.
ஒவ்வொரு பொருளின் லாபத்தின் அளவையும் குறைத்து, மலிவான விலைக்கு விற்பதால், சரவணா ஸ்டாரின் அனைத்து கிளைகளிலும், எல்லா காலங்களிலும் கூட்டம் அலை மோதும்.
அதனால், சரவணா ஸ்டோர் என்பது தமிழகத்தை கடந்து, உலக நாடுகள் பலவற்றிலும் கூட பேர் பெற்ற நிறுவனமாக விளங்குகிறது.
இவ்வளவு பெருமைக்கும், புகழுக்கும் உரிய சரவணா ஸ்டோர் உரிமையாளர்களில் ஒருவரான, மறைந்த செல்வரத்தினம் அண்ணாச்சி, சாதாரண கதர் வேட்டி, கதர் சட்டையுடன் எளிமையாக வந்து, விளம்பரத்தில் காட்சி கொடுத்தார்.
ஆனால் அடுத்த தலைமுறையை சேர்ந்த அந்த குடும்பத்தின் வாரிசு ஒருவர், சரவணா ஸ்டோர் ஹைபை விளம்பரத்தில், தமன்னா, ஹன்ஷிகா போன்ற பிரபல நடிகைகளுடன் மாடர்ன் லுக்கில் நடித்தார்.
இந்த விளம்பரத்தை பார்த்து, சமூக வலைத்தளங்களில் பலரும், பலவாறாக கிண்டல் செய்தனர். ஆனாலும், நான் வணிகத்தில் ஜெயித்தவன், நீங்களும் உங்கள் தொழிலில் ஜெயிக்க முயற்சி செய்யுங்கள் என்று அட்வைஸ் செய்வதுபோல பதில் சொல்லி சாதுர்யமாக முற்றுப்புள்ளி வைத்தார் அவர்.
இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கவேல் ஒன்றை காணிக்கையாக செலுத்திய அவர், செய்தியாளர்களுடன் பேசியபோது, தாம் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும், முதல் படத்தில் நயன்தாரா தமக்கு ஜோடியாக நடிக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
பணம் இருந்தால், சரவணா ஸ்டோரில் அனைத்தையும் வாங்கலாம். அதன் உரிமையாளராக இருந்தால், தமிழ் படம் என்ன, ஹாலிவுட் படங்களில் கூட நடிக்கலாம். பணம் பத்தும் செய்யும் அல்லவா?