santhanam talk about political
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சந்தானம். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் நடிகர் சந்தானம் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த 'இனிமே இப்படிதான்', 'தில்லுக்கு துட்டு' ஆகிய படங்களும் சூப்பர் ஹிட் ஆனது.

இதனைத் தொடர்ந்து சந்தானம் நடித்து வெளியான “சக்க போடு போடு ராஜா” கடந்த வாரம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்திலும் முந்தைய படங்களைப்போல் காமெடி கலந்த ஹீரோவாகவே தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சந்தானம்.
இந்த நிலையில், மதுரையில் 'சக்க போடு போடு ராஜா' திரைப்படம் திரையிடப்பட்டிருந்த பிரபல திரையரங்கிற்கு திடீர் விசிட் அடித்துள்ளார் சந்தானம். படம் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களிடம் திரைப்படம் குறித்தும் அவர் விசாரித்துள்ளார்.

இதன் பின்னர், சந்தானம், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 'சக்க போடு போடு ராஜா' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறேன். கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரத்தில் மட்டுமே நடிப்பேன். காமெடி மூலம் ரசிகர்களுக்கு சமுதாய சிந்தனையை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம் என்று சந்தானம் கூறினார்.

இதைத் தொடர்ந்து சந்தானத்திடம், செய்தியாளர்கள் 'அரசியலுக்கு வருவீர்களா?' என்று கேள்வி எழுப்பினர். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அரசியலுக்கு வரக்கூடாது என்பது கிடையாது. நான் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன். அரசியலில் எனக்கு ஆர்வம் இல்லை என்று நடிகர் சந்தானம் கூறினார்.
