கோயிலுக்கு சென்றுதான் வணங்கணுமா? வீட்டிலிருந்தே வணங்கலாமே...! நடிகர் சிவக்குமார் அறிவுரை!
பத்து வயது முதல் 50 வயது வரையுள்ள மாதவிடாய் காலத்தைக் கொண்ட பெண்கள் சபரிமலை ஐயப்பனை வழிபட அனுமதிக்க முடியாது என்ற தாத்ரிகளின் முடிவை ஏற்றுக் கொள்ளாத உச்சநீதிமன்றம்.
பத்து வயது முதல் 50 வயது வரையுள்ள மாதவிடாய் காலத்தைக் கொண்ட பெண்கள் சபரிமலை ஐயப்பனை வழிபட அனுமதிக்க முடியாது என்ற தாத்ரிகளின் முடிவை ஏற்றுக் கொள்ளாத உச்சநீதிமன்றம். சபரிமலையில் பெண்களும் வழிபடலாம் என்ற தீர்ப்பை வழங்கியது. சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்ட நிலையில் வழிபட வந்த பெண்கள் திருப்பி அனுப்பட்டனர்.
செய்தி சேகரிக்க வந்த பெண் பத்திரிகையாளர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த நிலையில், பதினெட்டாம் படியில் அர்ச்சகர்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். சபரிமலை கோயில் அருகில் பெரும் கலவரம் ஏற்படும் நிலையில், கோயிலை பூட்டி விட முடிவு செய்துள்ளதாகவும் தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் சிவக்குமார், பெண்கள் ஐயப்பனை வழிபட விரும்பினால் வீட்டிலிருந்தே வணங்கலாம் என்றும் கோயிலுக்கு சென்று வணங்க விரும்பினால் பாதுகாப்பு இருக்காது என்றும் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். சென்னை, வடபழனியில் தனியார் திரைப்பட பாடல்பதிவு நிலையத்தை நடிகர் சிவகுமார் திறந்து வைத்தார். இதன் பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
#MeToo விவகாரத்தில் இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையே உள்ள பிரச்சனையை நடந்தாலும், நடக்காவிட்டாலும் பொதுவெளியில் வெளிப்படுத்துவது அநாகரிகமானது என்றும் அது பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும் என்றார். சபரிமலைக்கு பெண்கள் செல்வது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, கடவுளை கோயில்களுக்கு சென்று தான் வணங்க வேண்டும் என்பது இல்லை. பெண்கள் ஐயப்பனை வீட்டிலிருந்தே வணங்கலாம். அப்படி கோயிலுக்கு செல்ல முற்பட்டால் பாதுகாப்பின்மை காரணமாக பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நடிகர் சிவக்குமார் கூறினார்.