சென்னையை அடுத்த திருப்போரூரில் நடிகர் விஜய் (vijay) பள்ளி ஒன்றை கட்டி வருவதாகவும், அந்த பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா என கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் நடிகர் விஜய். நேரடியாக அறிக்கை, பத்திரிகையாளர் சந்திப்பு இப்படி எதையும் அடிக்கடி செய்யாவிட்டாலும், விஜய் குறித்த ஒரு வரிச் செய்தி கூட தலைப்புச் செய்திகளாக மாறிவிடுகின்றன. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அந்த வகையில், தற்போது நடிகர் விஜய்யை பற்றி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதன்படி நடிகர் விஜய் சென்னையை அடுத்த திருப்போரூரில் பள்ளி ஒன்றை கட்டி வருவதாகவும், அந்த பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கப்பட உள்ளதாக தகவல் பரவி வந்தது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

இந்நிலையில், இந்த தகவல் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. அந்த பள்ளிக்கூடத்தை நடிகர் விஜய்யின் உறவினர் பிரிட்டோ தான் கட்டி வருகிறாராம். இவர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.

தயாரிப்பாளர் பிரிட்டோவுக்கு சொந்தமாக ஏற்கனவே ஒரு பள்ளியும், கல்லூரியும் உள்ள நிலையில், தற்போது அவர் திருப்போரூரில் இரண்டாவது பள்ளிக்கூடத்தை கட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.