RRR Promotional meet : பாகுபலி டப்பிங் மூவியா ? தமிழ் ரசிகர்கள் குறித்து ராஜமௌலி நெகிழ்ச்சி
RRR Promotional meet : பாகுபலியை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தான் உருவாக்கினேன் ஆனால் பாகுபலியை தெலுங்கு டப்பிங் என கூறியது வருத்தமளித்துள்ளதாக ராஜமௌலி தெரிவித்துள்ளார்.
பாகுபலி இரண்டு பக்கங்களின் மாஸ் வெற்றிக்கு பிறகு ரசிகர்களுக்கு அடுத்த மாஸ் விருந்தா இயக்குனர் ராஜமௌலி RRR படத்தை பிரமாண்ட செலவில் உருவாக்கி வருகிறார். ராம் சரண் (Ram Charan), ஜூனியர் என்.டி.ஆர் ( Junior NTR), ஆலியா பட் (Alia Bhatt), சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர் (RRR) திரைப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். 350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில். விறுவிறுப்பாக உருவாகி வரும், இந்த படம் வரும் ஜனவரியில் திரையிட தயாராகி வருகிறது.
ஏற்கனவே இந்த படத்திலிருந்து மோஷன் போஸ்டர், முதல் சிங்கிளாக "நட்பு" பாடல். இரண்டாம் சிங்கிளாக "நாட்டுக்கூத்து" பாடல் வெளியாகியானது. இதில் சமீபத்தில் வெளியான நாட்டு கூத்து பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ராம்சரண் - ஜூனியர் என்.டி.ஆர் இவர்களின் மின்னல் வேக நடனம் ரசிகர்களை கண்கொட்டாமல் பார்க்க வைக்கும் விதத்தில் அமைத்துள்ளது. தவிர அனைத்து மொழியிலும் இந்த பாடல் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. ஜனவரி மாதம் 7 ஆம் தேதி ஆர்.ஆர்.ஆர் படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பேசிய இயக்குனர் ராஜமௌலி; "சென்னை தான் எனக்கு சினிமா கற்றுத்தந்தது. படம் எடுக்கும் போதே, பெரிய படம் என்று சொல்ல முடியாது. ரசிகர்கள் தான் படத்தை பெரிய படம் என்று சொல்ல வேண்டும். ரஜினியை வைத்து படம் எடுக்க வேண்டும் என ஆசை தான்" என கூறியுள்ளார். அதோடு தமிழில் படம் எடுப்பீர்களா என கேட்ட கேள்விக்கு பதிலளித்த ராஜமௌலி பாகுபலியை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தான் உருவாக்கினேன் ஆனால் பாகுபலியை தெலுங்கு டப்பிங் என கூறியது வருத்தமாளித்துள்ளதாகவும், தமிழ் வரலாறுகளை முழுமையாக படித்து விட்டே இங்கு படம் செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.