ஒரு நாள் முழுவதும் அழுத ஆர்.ஜே.பாலாஜி... அப்படி என்னதான் நடந்தது?
பிரபல வானொலியில் ஆர்.ஜே வாக இருந்து வந்த பாலாஜி, குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் ஒரு நல்ல காமெடியன் என்ற அந்தஸ்தைப் பெற்றவர். ஒரே மாதிரி நடிப்பை வெளிப்படுத்தாமல், காற்று வெளியிடை, ஸ்பைடர் உள்ளிட்ட திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர் .
எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், தன் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றை பதிவிட்டு ஒரு நாள் முழுவதும் இந்தச் சம்பவத்தால் அழுதேன் எனக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது.... இப்போது என் தாத்தாவை நான் மிகவும் மிஸ் பண்ணுகிறேன்... நான் சிறுவனாக இருந்த போது என்னுடைய தாத்தாவின் சட்டைப் பையில் இருந்து பல முறை அவருக்குத் தெரியாமல் பணம் எடுத்திருக்கிறேன். அதை ஒரு முறை கூட அவர் கண்டு பிடித்தது இல்லை.
இதனால் அவர் ஒரு தத்தி என்று என்னுடைய மனதில் நினைத்துக் கொள்வேன்... இப்படியே நாட்கள் கழிந்தது. நான் வேலைக்குச் சென்று முதல் சம்பளத்தைப் பெற்றதும் என் தாத்தாவிடம் வந்து 1700 ரூபாயை அவர் கையில் கொடுத்து இது நான் உங்களிடம் எடுத்தது என பணத்தைக் கொடுத்தேன்.
உடனே என்னுடைய தாத்தா இன்னும் நீ 650 கொடுக்க வேண்டும் எனக் கூறினார்... இதில் இருந்து நான் பணம் எடுப்பது அவருக்கு தெரிந்திருந்தும் அவர் இத்தனை நாட்கள் அதனை ஒரு முறை கூட கூறவில்லை என நினைத்து அந்த நாள் முழுவதும் அழுதேன் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அன்று முதல், ஒருவரின் உண்மையான அன்பைப் புரிந்து கொண்டு நாம் என்றுமே ஏமாற்றக் கூடாது என முடிவெடுத்தேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
— RJ Balaji (@RJ_Balaji) December 28, 2017