Release the Padmavathi - Deepika Padukones nose - Brahmana organization

பத்மாவதி படத்தை வெளியிட்டால் அந்தப் படத்தின் கதாநாயகியான தீபிகா படுகோனேவின் மூக்கை அறுப்போம் என்று கார்னி சேனா அமைப்பு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள பத்மாவதி என்ற பாலிவுட் வரலாற்றுத் திரைப்படத்தில் பத்மாவதியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார்.

ராணா ரத்தன் சிங் வேடத்தில் ஷாகித் கபூரும், அலாவுதின் கில்ஜி வேடத்தில் ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்புட் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று படத்திற்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனையடுத்து, டிசம்பர் 1-ஆம் தேதி "பத்மாவதி"வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் பத்மாவதி படத்தை எதிர்க்கும் பிராமண அமைப்பான கார்னி சேனா அமைப்பு பத்மாவதியாக நடித்துள்ள தீபிகா படுகோனேவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

"பொதுவாக நாங்கள் பெண்களை அடிக்கமாட்டோம். ஆனால், தேவைப்பட்டால் தீபிகா படுகோனேவின் மூக்கை அறுக்கவும் தயங்கமாட்டோம்" என்று அந்த அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மற்றொரு பிராமண அமைப்பு, "படத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி ரத்தக்கறை பட்ட கடிதம்" ஒன்றை திரைப்பட தணிக்கைக் குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.

ஏன் பத்மாவதிக்கு இவ்வளவு எதிர்ப்பு?
ராஜஸ்தானில் 13-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த சித்தூர் ராணி பத்மினியின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது பத்மாவதி படத்தின் கதை.

டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி, ராணி பத்மினி மீது ஆசைகொண்டு படை எடுத்து வந்ததாகவும், அதனை இப்படத்தில் தவறாக சித்தரித்துள்ளதாகவும் இப்படத்தின் எதிர்ப்பாளர்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.