இந்த மனசுதான் சார் கடவுள்... 3 லட்சம் பேர் வாழ்வில் ஒளியேற்றத் தயாரான ரியல் ஹீரோ சோனு சூட்..!
அந்த வேலையில் நல்ல சம்பளம், தொழிலாளர் வைப்பு நிதி, இன்சூரன்ஸ், ஆகியவை இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் ஊரடங்கில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை குவித்து வைத்திருக்கும் பெரிய மாஸ் ஹீரோக்கள் கூட பெயருக்கு குறிப்பிட்ட தொகையை அரசுக்கு நன்கொடையாக கொடுத்துவிட்டு அமைதியாகி விட்டனர். ஆனால் திரையில் வில்லனாக தோன்றும் நடிகர் சோனு சூட், ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களுக்கு ஏராளமான உதவிகள் செய்து ரியல்ஹீரோவாக வலம் வருகிறார்.
ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தனது சொந்த செலவில் விமானம், பஸ் மூலம் அனுப்பி வைத்தார் ர் சோனு சூட். சமூக வலைதளங்கள் மூலம் யாராவது உதவி என்று கேட்டால் அடுத்த நாளே அவர்களுக்கு அந்த உதவி போய் சேரும். விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுவதற்கு காளை மாடுகளை வாடகைக்கு எடுக்க கூட பணம் இல்லாமல் இரண்டு மகள்களை ஏரில் பூட்டி உழுத நிலையில் அடுத்த நாளே அவருக்கு டிராக்டர் வாங்கிக் கொடுத்தார். சாப்ட்வேர் இன்ஜினியர் பணியை இழந்து காய்கறி வியாபாரம் செய்த இளம்பெண்ணுக்கு அடுத்த நாளே சாப்ட்வேர் இன்ஜினியர் பணி வாங்கி கொடுத்தார்.
இதேபோல் சமூக வலைதளங்களில் வெளிவரும் செய்தியை அடிப்படையாக கொண்டு பல உதவிகளை செய்து கொண்டிருக்கும் சோனு சூட் தற்போது 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய சோனு சூட் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் இருப்பதைக் கருத்தில் கொண்டு மூன்று லட்சம் பேருக்கு வேலை ஏற்படுத்திக் கொடுக்கப் போவதாகவும் அந்த வேலையில் நல்ல சம்பளம், தொழிலாளர் வைப்பு நிதி, இன்சூரன்ஸ், ஆகியவை இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சோனு சூட்டின் இந்த ஏற்பாட்டால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள். திரையில் வில்லன் நடிகராக இருந்தாலும் இந்த கொரோனா காலத்தில் மக்கள் மனதில் ஹீரோவாக இடம்பிடித்துள்ள சோனு சூட் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.