தொடர்ந்து வந்த ஆபாச அழைப்புகள்... நடிகை வாணி போஜன் பட இயக்குநர் மீது ரியல் எஸ்டேட் அதிபர் போலீசில் புகார்...!
அந்த எண்ணை வாணி போஜனுடையது என நினைத்து தினமும் 50க்கும் மேற்பட்டோர் போன் செய்துள்ளனர்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியல் மூலம் தமிழகத்தின் பட்டி, தொட்டி எல்லாம் புகழ் பெற்றவர் வாணி போஜன். ரசிகர்கள் இவரை செல்லமாக சின்னத்திரை நயன்தாரா என்று அழைத்து வருகின்றனர். ஒரே சீரியலில் அம்மணிக்கு ஆகா...ஓஹோ என்று கிடைத்த புகழைப் பார்த்து கன்னட படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க வைத்தனர். விஜய்தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான அந்த படம் சூப்பர் ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து, தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.
சமீபத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் ஆகியோருடன் இணைந்து ஓ மை கடவுளே என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். புதுமுக இயக்குநர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கிய இந்த படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. அதிலும் நம்ம சின்னத்திரை நயன்தாராவின் கேரக்டர் மிகவும் பேசப்பட்டது.
தற்போது இந்த படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் வாணிபோஜனின் நம்பர் என ஒரு எண் சொல்லப்படுகிறது. அந்த சீனைப் பார்த்த பலரும் வாணி போஜன் என நினைத்து பலரும் அந்த எண்ணுக்கு போன் செய்துள்ளனர். ஆனால் அந்த படத்தில் கூறப்பட்டதோ மகாகவி பாரதி நகரைச் சேர்ந்த பூபாலன் என்ற ரியல் எஸ்டேட் அதிபருடையது.
அந்த எண்ணை வாணி போஜனுடையது என நினைத்து தினமும் 50க்கும் மேற்பட்டோர் போன் செய்துள்ளனர். வாணிபோஜன் என நினைத்து ஆபாசமாக பேசியுள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பூபாலன் ஓ மை கடவுளே பட இயக்குநர் அஸ்வந்த் மாரிமுத்து மற்றும் படக்குழுவினர் மீது சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.