ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குபவர்கள் பட்டியலில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, கேஎஸ் ரவிக்குமார், கார்த்திக் சுப்புராஜ், பாண்டிராஜ் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான படம் அண்ணாத்த. சிவா இயக்கியிருந்த இப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இருப்பினும் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் அடுத்த பட தேர்வில் மிகவும் கவனமாக இருக்கிறாராம் ரஜினி.

அந்த வகையில் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குபவர்கள் பட்டியலில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, கேஎஸ் ரவிக்குமார், கார்த்திக் சுப்புராஜ், பாண்டிராஜ், வெங்கட்பிரபு, மிஷ்கின் என பல்வேறு பெயர்கள் அடிபட்ட வண்ணம் இருந்தன.
இந்த லிஸ்டில் கடைசியாக சேர்ந்தவர் நெல்சன். தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ள நெல்சன், ரஜினிக்கு ஒரு கதையை சொன்னாராம். அந்தக்கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துப்போக, காத்திருந்த இயக்குனர்களையெல்லாம் கழட்டிவிட்டு, நெல்சனுக்கு ஓகே சொல்லிவிட்டாராம் ரஜினி.

ரஜினியின் 169-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. நெல்சன் தற்போது இயக்கி முடித்துள்ள பீஸ்ட் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. மேலும் அனிருத் தான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதன்மூலம் பீஸ்ட் கூட்டணியில் ரஜினி விரைவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
