rajinikanth got 23 seats republic channel
தமிழக அரசியல் களம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு புதிய மாற்றங்களை சந்தித்து வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம், சசிகலா சிறைக்கு சென்றது, அதிமுகவில் தினகரன் தலைமை தாங்கியது, பிரிந்திருந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒன்றிணைந்தது, ரஜினி கமலின் அரசியல் நிலைப்பாடு, சுயேட்சை வேட்பாளரான தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆகியது என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இதில், குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கடந்த 21 வருடங்களாக அரசியலுக்கு வருவேன் வருவேன் என சொல்லிக்கொண்டிருந்த ரஜினி, ஒரு வழியாக அரசியலுக்கு வந்து தனிக்கட்சி தொடங்க போவது உறுதி என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி அறிவித்தார். தான் ஆன்மிக அரசியலில் ஈடுபட போவதாகவும், வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடுவேன் என்றும் அறிவித்தார். தற்போது ரசிகர்களையும் மக்களையும் உறுப்பினர்களாக ஒன்றிணைக்கும் வகையில் "ரஜினி மக்கள் மன்றம்" என்ற இணையதளத்தை தொடங்கி அதில் உறுப்பினர்களாக சேரும்படி அழைப்பும் விடுத்தார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ரஜினி தனிக்கட்சி தொடங்கி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால், அவருக்கு எத்தனை சீட் கிடைக்கும் என ரிபப்ளிக் டிவி கருத்து கணிப்பை நடத்தியுள்ளது.
அதில் ரஜினிக்கு 33.7 % வாக்குகள் பெற்று 23 தொகுதிகளில் வெற்றி பெறுவார் என்றும் அவருக்கு அடுத்தபடியாக திமுக 28.3% வாக்குகள் பெற்று 14 சீட்டுகள் கிடைக்கும் என்றும் ஆளும் அதிமுக அரசுக்கு வெறும் 2 சீட் மட்டுமே கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் பாஜகவிற்கும் காங்கிரசுக்கும் ஒரு சீட் கூட கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

