rajinikanth again meet fans

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவது பற்றி பல்வேறு தகவல்கள் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தாலும் இன்னும் அதைப் பற்றி அதிகார பூர்வமாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்பது ரஜினி ரசிகர்களுக்கு சிறு வருத்தம் தான்.

ஏற்கனவே கடந்த மே மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, உள்ளிட்ட 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து அவர்கள் மத்தியில் அரசியல் குறித்து சூசகமாகப் பேசியது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

மேலும் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டபோது... போருக்குத் தயாராகுங்கள் என்றும். நான் அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன். நாட்டில் சிஸ்டம் கெட்டுக்கிடக்கிறது. என்றெல்லாம் பேசியது ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை உறுதிப் படுத்துவது போல் அமைந்தாலும்... பின் இது குறித்து ரஜினி எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ரஜினிகாந்தின் சகோதரர் சத்திய நாராயண ராவ் ரஜினி விரைவில் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார் என்று கூறினார். மேலும் தற்போது இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த் மற்ற எந்தப் படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் இருப்பது அரசியலுக்கு வருவதற்காகத் தான் என கூறப்படுகிறது.

அதே போல் இந்த மாதத்தின் இறுதியில் ரஜினிகாந்த், விடுபட்ட 16 மாவட்ட ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பேச ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.