வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் டிவீட்… வலைதளத்தில் தீயாய் பரவும் ஃபோட்டோ!!
தாதாசாகேப் பால்கே விருது பெற்றபின் பிரதமர் மோடியையும், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து வாழ்த்து பெற்றதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்தோடு புகைப்படத்தை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
திரைத்துறையில் நீண்ட காலம் பணியாற்றுபவர்களை கவுரவிக்க மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. மிக உயரிய விருதாக கருதப்படும் இந்த விருதை இதுவரை அமிதாப்பச்சன், மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன், இயக்குனர் பாலச்சந்தர் ஆகியோர் பெற்றுள்ளனர். அவர்கள் வரிசையில் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்துக்கு 2019 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. அதன்படி டெல்லியில் நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வழங்கினார். திரையுலகில் ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. விருதை பெற்ற ரஜினிகாந்த், விருது வழங்கிய மத்திய அரசுக்கும் தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனருக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். அதனை தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் பலர் நடிகர் ரஜினிகந்துக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில், தாதாசாகேப் பால்கே விருது பெற்றபின் பிரதமர் மோடியையும், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து வாழ்த்து பெற்றதாக பதிவிட்டுள்ளதோடு அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் உடனிருந்தார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் பலரால் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.