"ஜெ. இறந்துவிட்டதால் எனக்கு பிறந்தநாள் வேண்டாம்" - ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் 12 ஆம் தேதி பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதற்கான ஏற்பாடுகளில் அவரது ரசிகர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகம் முதலமைச்சரை இழந்து தவித்து வரும் நிலையில் பிறந்த நாள் கொண்டாட வேண்டாம் என ரஜினி தனது ரசிகர்களுக்கு அன்பு கட்டளை இட்டுள்ளார்.
கடந்த 90களில் திரையுலகினர் ரஜினியை ஜெயலலிதாவுக்கு எதிராக கொம்பு சீவி விட்டனர். அப்போதிருந்தே ஜெவுக்கும் ரஜினிக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்தது. பின்னர் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெவுக்கு எதிராக ரஜினி குரல் கொடுத்ததால் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதன் பின்னர் ஜெ ரஜினி இடையே பிளவு மேலும் அதிகரித்தது.
ஆனால் ரஜினிக்கு பின்னாளில் அவரது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையை முதலமைச்சர் ஜெ தீர்த்துவைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஜெமீது ரஜினிக்கு தனிப் பாசமே உண்டானது எனச் சொல்லலாம்.
இதன் பின்னர் ஜெ ரஜினி இடையே பரஸ்பரம் அன்பும்,நட்பும் உருவானது. பிறந்தநாள் உள்ளிட்ட தினங்களில் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டனர்.
கடந்த 6ம் தேதி மறைந்த ஜெயலலிதாவின் உடலுக்கு குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்திய ரஜினி அவரது உடலைப் பார்த்து கண் கலங்கினார்.
இந்நிலையில் நாடே துக்கத்தில் இருக்கும் போது வரும் 12 ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு ரஜினி அன்பு கட்டளை பிறப்பித்துள்ளார். ரஜினியின் இந்த செயல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,