சூப்பர் ஸ்டாரை சுழன்றடிக்கும் சங்கடங்கள்... மன்னிப்பு கேட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி..!
பணம் வசூலிப்பதாக மக்கள் மன்றத்தினர் மீது சுதாகர் குற்றச்சாட்டியது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து அவர் மீது கடும் விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைத்தனர்.
பல ஆண்டுகளாக ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என காத்திருந்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தார் சூப்பர் ஸ்டார். இம்முறை சட்டமன்ற தேர்தலை கண்டிப்பாக கட்சி துவங்கி, தேர்தலில் போட்டியிடுவார் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் திடீர் என தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி இனி அரசியலுக்கு வரப்போவதில்லை என, மூன்று பக்க அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார் ரஜினிகாந்த்.
இவரது முடிவுக்கு பிரபலங்கள், மற்றும் சில ரசிகர்கள் ஆதரவு தெரிவித்த போதிலும், சில ரசிகர்கள் ரஜினிகாந்தின் இந்த முடிவுக்கு தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பையும் தெரிவித்து, ரஜினிகாந்த் வீட்டின் முன்பே போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக ரஜினிகாந்த் வீட்டின் முன்பே ரசிகர் ஒருவர் தீ குளிக்கவும் முயன்றார். இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி பிஎம் சுதாகர், பரபரப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில், ரஜினி ரசிகர்கள் மன்றத்திற்கும், ரஜினி மக்கள் மன்றத்திற்கும் வணக்கம். நமது தலைவர் தன்னுடைய உடல்நிலை குறித்தும், மருத்துவர்கள் ஆலோசனையை மீறி அரசியலுக்கு வந்தால், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மூலம் தன்னை நம்பி வரும் மக்கள் துன்பப் படக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் படியும், தாம் அரசியலுக்கு வர முடியாத சூழ்நிலை குறித்தும் தாம் அன்புத் தலைவர் வெளிப்படையான தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன்பின்னரும் அவரை அரசியலில் ஈடுபட சொல்லி கட்டாயப்படுத்தி, அதற்காக போராட்டங்களில் ஈடுபட போவதாக சில ரசிகர்கள் பேசுவது அவரை மேலும் நோகடிக்கும் செயல்.
இந்த போராட்டத்திற்கு ஒரு சிலர் அதற்கான செலவுகளுக்கு என்று கூறி நிதி வசூல் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. தலைவர் மீது அன்பும் அவர் நலனில் அக்கறையும் கொண்ட ரஜினி ரசிகர் மன்ற காவலர்களும், ரசிகர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று தலைமை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் எனக்குறிப்பிட்டார். பணம் வசூலிப்பதாக மக்கள் மன்றத்தினர் மீது சுதாகர் குற்றச்சாட்டியது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து அவர் மீது கடும் விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைத்தனர்.
இதையடுத்து சுதார் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அறவழிப் போராட்டத்திற்காக சிலர் நிதி வசூல் செய்வதாக எனக்கு வந்த செய்தியை எனது அறிக்கையில் தெரிவித்தேன். அது ரசிகர்கள் அனைவரையும் கூறுவது போல ஒரு சிலர் திசை திருப்புகின்றனர். அப்படி யாரவது எண்ணியிருந்து அதனால் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன் என மன்னிப்பு கோரியுள்ளார்.