தள்ளிப் போன 2Point0? பாடகிக்கு பாலியல் தொல்லை, சீனாவை குறிவைக்கு நயன்? சந்தானத்துக்கு டிமிக்கி கொடுத்த விஜய் பட தயாரிப்பாளர்!
சந்தானத்துக்கு டிமிக்கி கொடுத்த விஜய் பட தயாரிப்பாளர்!
சந்தானம் தற்போது ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’, தில்லுக்கு துட்டு-2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே ராஜேஷ் படங்களில் காமெடி வேடத்தில் நடித்த சந்தானம், தற்போது கதாநாயகனாக நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய படத்தை விஜய் நடித்த மெர்சல் படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. சில காரணங்களால் சந்தானம் படத்தை தயாரிக்க இருந்த முடிவை அந்த நிறுவனம் கைவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நடிகர் பிரபுதேவா அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான பிரபுதேவா ஸ்டூடியோஸ் மூலம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மீண்டும் தள்ளி போகும் 2Point0!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் 2pointO படத்தில் நடித்து உள்ளார், ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே வருகிறது. இந்த வருட சுதந்திர தினத்திற்கு வெளியாகும் என எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தள்ளி போவதாக தகவல் கசிந்துள்ளது.
இந்த படத்தின் VFX காட்சிகளுக்கு பணியாற்றி வந்த அமெரிக்க நிறுவனம் ஒன்று திவால் ஆகியுள்ளது. இதனால் VFX பணிகள் வேறொரு கம்பெனியுடன் ஒப்படைக்க வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படம் மீண்டும் தள்ளி போகும் என செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த வருட தீபாவளி அல்லது அல்லது அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகலாம் எனவும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
பிரபல பாடகிக்கு பாலியல் தொல்லை... சமூக வலைதளத்தில் பதிவு!
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல பின்னணி பாடகி சின்மயி ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது அவருக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாகவும், இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில், பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகள் குறித்து குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் என யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள பயம் கொள்வதால், பகிர்ந்துக்கொள்ளும் போது அவர்களுக்குள் பிறக்கும் வலிமையை அவர்கள் உணர்வதில்லை.
ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணாக கூறுகிறேன், உங்கள் சம்மதம் இன்றி உங்களை தொடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர் குறித்து அனைவரிடமும் பகிருங்கள். நான் அமைதியாக இருந்தால் குற்றம் செய்பவன் அதனை அவருக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மேலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவான் என பதிவிட்டுள்ளார்.
சீனா மார்கெட்டை குறிவைக்கும் “சிரஞ்சீவி நயன்தாரா” படம்!
மெகா பட்ஜெட்டில் உருவாகிவரும் இந்திய படங்களை வெளிநாடுகளிலும் திரையிடுவதில் தயாரிப்பாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். ராஜமவுலி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகிய ‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ படங்கள் உலக அளவில் பெரும் வசூலை குவித்தன. இந்தி படமான ‘டங்கல்’ சீனாவில் அசைக்க முடியாத சாதனையை படைத்தது.
இந்த படங்களுக்கு அங்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததைப்போல, தெலுங்கில் சிரஞ்சீவி, நயன்தாரா நடிக்கும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தையும் சீனாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
அதற்கான ஏற்பாடுகள் இப்போதே நடந்து வருகிறது. இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்று கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் முக்கிய வேடத்தில் நடிப்பதால் மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிரஞ்சீவி மகன் ராம் சரண் தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இந்தப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.