தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்‍கான தேர்தல் மார்ச் 5-ம் தேதி நடைபெறும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தலைவர் உள்ளிட்ட 27 பதவிகளுக்‍கான தேர்தல் நடத்துவதற்காக சென்னை உயர்நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி திரு. எஸ். ராஜேஸ்வரனை, தேர்தல்அதிகாரியாக நியமித்தது.

இதனையடுத்து, தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திரு. ராஜேஸ்வரன், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்‍கான வேட்பு மனுக்‍களை, வரும் 27-ம் தேதிமுதல் அடுத்த மாதம் 3-ம்தேதி வரை, சங்க அலுவலகத்தில் வழங்கப்படும் என தெரிவித்தார்.

வேட்பு மனு தாக்‍கலுக்‍கான கடைசி நாள் அடுத்த மாதம் 4-ம் தேதி என்றும் அவர் குறிப்பிட்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லேண்ட்ஸ் திரையரங்கில் இத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் கலைப்புலி தானு தலைமையில் ஒரு குழுவும், நடிகர் விஷால் தரப்பில் ஒரு குழுவும் இத்தேர்தலில் களமிறங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மேலும் இயக்குநர் டி,ராஜேந்தர், நடிகை ராதிகா உள்ளிட்டோரும் இத்தேர்தலில் நிற்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.