producer asokekumar sucide

சுப்ரமணியபுரம் பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை…பைனான்சியர் அன்புசெழியன் மீது வழக்குப் பதிவு ...சிங்கப்பூர் தப்பி ஓட்டமா?

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சுப்ரணியபுரம் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரும், இயக்குநர் சசிகுமாரின் மைத்துனருமான அசோக்குமார், கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்டதையடுத்து, சினிமா பைனான்சியர் மதுரை அன்புசெழியன் மீது இபிகோ 306 பிரிவின் கீழ் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்புசெழியன் சிங்கப்பூர் தப்பிஓட முயற்சி செய்வதாக தகவல்கள்கள் வெளியாகியுள்ளன.

மெளனராகம், நாயகன் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த மிகப் பெரிய தயாரிப்பாளர் ஜிவி என அழைக்கப்படும் ஜி,வெங்கடேஸ்வரன். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்டார். தற்போது அதே கந்துவட்டி கொடுமையால் மேலும் ஒரு தற்கொலையை சந்தித்திருக்கிறது தமிழ் திரையுலகம்.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் சசிகுமாரின் படத் தயாரிப்பு நிறுவனமான கம்பெனி புரொடக்சன்ஸ் . நிறுவனத்தில் நிர்வாகியாகவும், சசிகுமாரின் படங்களின் இணை தயாரிப்பாளராகவும் இருந்த அசோக்குமார் நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார். இவர் சசிகுமாரின் அத்தை மகன் உறவும் கூட. 

சென்னையில் வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஆற்காடு சாலை தனியார் அபார்ட்மெண்ட் ஒன்றில் தங்கியிருந்த அசோக் திடீரென நேற்று வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன், கந்துவட்டியால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மதுரை பைனான்சியர் அன்பு செழியனிடம் வாங்கிய பணத்துக்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு மேல் பல லட்சங்கள் வட்டியாக கொடுத்திருந்தும் தொடர்ந்து கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாகவும், தன்னையும் தனது குடும்பத்தினரையும் கேவலமாக அன்பு செழியின் மிரட்டுவதாகவும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

தான் மட்டுமல்லாமல் இயக்குநர் சசிகுமாரும் அன்புசெழியனால் மிரட்டப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து இயக்குநர் சசிகுமார், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இயக்குநர்கள் அமீர், கரு.,பழனியப்பன் உள்ளிட்ட இயக்குநர்களும் சசிகுமாருடன் சென்று புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் பைனான்சியர் மதுரை அன்புசெழியன் மீது இபிகோ 306 செக்சன்படி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் அன்பு செழியன் தலைமறைவாகிவிட்டதாகவும், இன்று மதுரையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் தப்பிச் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.