ரஜினிகாந்த், மோகன்லால், மம்முட்டி, விஜய் ஆகியோருடன் நடித்த நடிகையும், 90-களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவருமான நடிகை ஒருவர் தன் வாழ்க்கையில் பல சோகங்களை எதிர்கொண்டுள்ளார். அவர் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

‘பூவே உனக்காக’ அஞ்சு அரவிந்த் 

1996-ம் ஆண்டு வெளியான ‘பூவே உனக்காக’ என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் அஞ்சு அரவிந்த். சில காலமாக திரைத்துறையில் இருந்து விலகி இருந்த அவர், சமீபத்தில் தொலைக்காட்சியில் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவரது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், இரண்டாவது திருமணமும் சோகத்தில் முடிந்துள்ளது.

சோகத்தில் முடிந்த அஞ்சு அரவிந்தின் திருமண வாழ்க்கை

பேட்டியில் அவர் கூறியதாவது, “முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த பின்னர் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன். ஆனால் அந்தத் திருமணமும் சோகத்தில் முடிந்தது. வாழ்க்கை எதிர்பாராத பல திருப்பங்களை கொடுத்தது. திருமணம் முடிந்து சில நாட்களுக்குப் பின்னர் இரண்டாவது கணவரும் இறந்துவிட்டார். இதனால் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானேன். அதன் பிறகு வாழ்க்கை சில ஆச்சரியங்களை எனக்கு கொடுத்தது” என்று கூறினார்.

பள்ளிப்பருவ நண்பருடன் புது வாழ்க்கையைத் தொடங்கிய அஞ்சு

நீண்ட நாட்களுக்குப் பின்னர் தனது பள்ளி பருவத்து நண்பரான சஞ்சய் அம்பல பரம்பத் என்பவரை அஞ்சு சந்திக்க நேர்ந்துள்ளது. இந்த நட்பு பின்னாளில் காதலாக மாற, ஐந்து ஆண்டுகளாக பெங்களூரில் அவருடன் வசித்து வருகிறார் அஞ்சு. பள்ளி படிக்கும் பொழுது நடன வகுப்புகளில் இருவரும் சந்தித்துக் கொண்டுள்ளனர். மொபைல் போன்கள் போன்ற வசதி இல்லாததால் இருவருக்கும் இடையே இருந்த நட்பை தொடர முடியாமல் போனது. நீண்ட நாட்களுக்கு பின்னர் அவர்கள் சந்தித்துக் கொண்டுள்ளனர். தற்போது அவர் வாழ்க்கைத் துணையாக மட்டுமல்லாமல் அஞ்சு அரவிந்துக்கு மிகப்பெரிய ஆதரவாகவும் இருந்து வருகிறார்.

பெங்களுருவில் அஞ்சு நடத்தி வரும் நடனப்பள்ளி

நடன ஆசிரியராக விரும்பிய அஞ்சுவுக்கு முழு ஆதரவை கொடுத்துள்ளார் சஞ்சய். இருவரும் இணைந்து பெங்களூரில் ‘அஞ்சு அரவிந்த் அகாடமி ஆஃப் டான்ஸ்’ என்கிற நடனப் பள்ளியையும் நடத்தி வருகின்றனர். தமிழில் வெளியான ‘96’ படத்தில் போல இவர்களின் கதை அமைந்துள்ளது. பள்ளியில் பிரிந்த நண்பர்கள் வாழ்க்கையில் மீண்டும் சந்தித்துள்ளனர். ஐடியில் பணியாற்றி வந்த சஞ்சய் இப்போது அதிலிருந்து ஓய்வு பெற்று சமூக சேவை மற்றும் எழுத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அஞ்சுவைப் போலவே அவரும் ஒரு நடன கலைஞராவார்.

சோகங்களில் இருந்து மீண்டு வரும் அஞ்சு

அஞ்சுவின் மகள் அன்விகா தற்போது இடைநிலைப் பள்ளியில் படித்து வருகிறார். விவாகரத்து, இரண்டாவது கணவரின் இழப்பு ஆகியவற்றிலிருந்து மீண்டு வந்த அவர், வீட்டிலேயே முடங்கி விடாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். நடனப் பள்ளியையும் நடத்தி வருகிறார்.