ponvannan resignation issue nasar open talk
தயாரிப்பாளர் சங்க பிரச்சனை முடிவதற்குள், புதிதாக தலை தூக்கியுள்ளது நடிகர் சங்க பிரச்னை. இத்தனை நாள் சுமுகமாக சென்றுகொண்டிருந்த நடிகர் சங்கத்தில் இருந்து நடிகர் பொன்வண்ணன், அவர் வகித்து வந்த துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக திடீர் என அறிவித்தார். இவருடைய ராஜினாமா கடிதம் ஒரு மாதத்திற்கு முன்பே, கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் நடிகர் சங்க தலைவர் மற்றும் மற்ற நிர்வாகிகள் அதனை ஏற்காமல் அவரிடம் தொடர்ந்து சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் பொன்வண்ணனின் ராஜினாமா குறித்து பேசியுள்ள, நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொன்வண்ணனின் ராஜினாமா கடிதத்தை ஏற்க முடியாது என திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும் இந்த ராஜினாமா குறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் முதல் முறையாக பேட்டி அளித்துள்ளார்.

இதே போல், நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் இது குறித்துக் கூறுகையில், துணைத் தலைவர் பதவி வகித்து வரும் நடிகர் பொன்வண்ணனே அவருடைய நிலைப்பாட்டை தானாக முன்வந்து தெரிவிப்பார் என்றும் சங்க விதிப்படி தேர்தலில் நிற்கக் கூடாது என்கிற விதி இல்லை எனவும் கூறியுள்ளார்.

பொன்வண்ணன் பதவி விலக முக்கியக் காரணமான விஷால் இப்படிக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் இன்று நடிகர் ரித்திஷ் மற்றும் எஸ்.வி.சேகர் இருவரும் விஷாலுக்கு எதிராக தங்களுடைய கருத்தை தெரிவித்தனர்.
