சிறுவர்களைத் வலைவீசி தேடிய போலீசார் ! பாகுபலியால் நடந்த சுவாரஷ்ய சம்பவம்...
கடந்த புதன்கிழமையன்று மாலை ஜெய்பூர் மாநிலத்தில் உள்ள சக்தி நகரைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் காணாமல் போனதாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களுக்காகக் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் கடத்தப்படுவதால், எந்தவித அசம்பாவிதமும் நடைபெறுவதற்கு முன்னர் குழந்தைகளைக் காப்பாற்ற போலீஸார் விரைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் குழந்தைகள் மூவரும் ஜோட்வாரா பகுதியில் உள்ள ஒரு கோயில் அருகே கண்டுபிடித்து அவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர். குழந்தைகள் காணாமல் போனதற்கான காரணம் குறித்து விசாரித்த காவல்துறையினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
இதுகுறித்து துணைக்காவல் அதிகாரி குரு சாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, 3 சிறுவர்களை காணவில்லை என்ற தகவல் நேற்றிரவு காவல் நிலையத்துக்குக் கிடைத்தது. அதிலிருந்து இரவு முழுவதும் குழந்தைகளைத் தேடும் பணியில் பல தரப்பு காவல் படையினரும் இரவு முழுக்க ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
குழந்தைகள் கிடைத்தப் பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது சிறுவர்கள் மூன்றுபேரும் பாகுபலி 2 திரைப்படத்தைக் காண திரையரங்குச் சென்றுள்ளனர்.
ஆனால், மூன்று பேருக்கும் டிக்கெட் கிடைக்காமல் வீட்டுக்குத் திரும்ப முயற்சி செய்துள்ளனர். ஆனால் சிறுவர்கள் வழி தெரியாமல் தவித்துள்ளனர். 8 முதல் 13 வயதுடைய இந்த மூன்று சிறுவர்களில் இருவர் சகோதரர்கள், ஒரு சிறுவன் அவர்களின் நண்பன். மூவரும் தற்போது அவர்களின் வீடுகளில் பத்திரமாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.