Nadigar sangam Election : தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் சங்க தேர்தல்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு் ஜூன் மாதம் 23-ந் தேதி நடத்தப்பட்டது. ஆனால், அந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை

பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து நடிகர் ஏழுமலை என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண எந்த தடையும் இல்லை என உத்தரவிட்டதைத் தொடர்ந்து 2019-ல் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

பாண்டவர் அணி முன்னிலை

இதில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர். தபால் வாக்குகளிலும் இந்த அணியினர் தொடர்ந்து முன்னிலை வகித்துள்ளனர். தபால் வாக்குகளில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் 118 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த கே.பாக்யராஜுக்கு 86 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.

அதேபோல் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்திக்கு 429 தபால் வாக்குகளும், துணைதலைவர் பதவிக்கு போட்டியிட்ட கருணாஸ் 219 தபால் வாக்குகளையும், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் 347 தபால் வாக்குகளையும் பெற்றுள்ளார். இதேபோல் மொத்தமுள்ள 29 பதவிகளிலும் பாண்டவர் அணியே முன்னிலை வகிப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Arabic Kuthu song :3 வருஷமா டாப்பில் இருந்த ரவுடிபேபி.. ஒரே மாதத்தில் தட்டித்தூக்கி சாதனை படைத்த அரபிக் குத்து