Pa Ranjith next : இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்தில் தனது மனைவிக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.
2012-ஆம் ஆண்டு வெளியான 'அட்டக்கத்தி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பா.ரஞ்சித், அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து வடசென்னையைக் கதைக்களமாக்கி இயக்கிய 'மெட்ராஸ்' திரைப்படம், மாபெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகின் உச்சநட்சத்திரமான ரஜினிகாந்த்தை வைத்து 'கபாலி', 'காலா' படங்களை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
இவ்விரு படங்களும் பேசிய அரசியல், தமிழ் சினிமாவிற்குப் புதியதில்லை என்றாலும், அதில் இருந்த காரம் தமிழ் சினிமாவிற்குப் புதிதானதே. ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை, அதே சமூகப் பின்புலத்தில் இருந்து வந்த ஒருவர் பேசியது பெரிய விவாதத்தையும், அத்தகைய விவாதங்களுக்குப் புதிய களத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இயக்கம் மட்டுமில்லாது பா.ரஞ்சித் தன்னுடைய நீலம் புரொடக்சன்ஸ் மூலம் படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். அவரது தயாரிப்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் அவரது தயாரிப்பில் வெளியான 'ரைட்டர்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
திரைப்படங்கள் மட்டுமல்லாது சமூக தளங்களிலும் மாற்றத்திற்கான பல்வேறு முன்னெடுப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார் பா.ரஞ்சித். இந்நிலையில், ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை இயக்கி முடித்துள்ளார் பா.ரஞ்சித். இதனை தனது பேட்டிகளிலும் ஏற்கெனவே உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் ‘சார்பட்டா’ துஷாரா விஜயன், அசோக் செல்வன், காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இது குறித்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இந்த பின் குறித்து ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பா.ரஞ்சித்தின் மனைவி அனிதா; "நட்சத்திரம் நகர்கிறது படப்பிடிப்பு முடிந்தது. இந்த படத்தில் நடிக்க கிடைத்த முதல் வாய்ப்புக்கு மிக்க நன்றி அன்புள்ள பா ரஞ்சித். கல்லூரி காலத்திற்குப் பிறகு உங்களுடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என கூறியுள்ளார்.
