oviya crossed 3 lakh follwers in twitter
தமிழில் 'களவாணி' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா. தொடர்ந்து இவர் நடிப்பில் 'மெரினா','கலகலப்பு', 'மதயானைக்கூட்டம்', 'யாமிருக்க பயமே', 'மூடர் கூடம்' ஆகிய படங்கள் வெளியானாலும் தமிழில் சொல்லிக்கொள்ளும்படியான ஹிட்கள் எதுவும் இவர் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ் சீசன் 1' நிகழ்ச்சியில் ஓவியாவும் 15 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.
ஆரம்பத்தில் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இவரைக் கலாய்த்தாலும் அதன்பின்னர் இவரின் உண்மைக்கும், நேர்மைக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

ஓட்டுகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது வாரத்தில் சக போட்டியாளர்கள் இவரை நாமினேட் செய்தனர். ஆனால் ஓவியா மீது பாசம் வைத்திருந்த ரசிகர்கள் சுமார் 1 கோடிக்கும் அதிகமான ஓட்டுகளைப் போட்டு அவரைக் காப்பாற்றி தங்களது அன்பை நிரூபித்தனர்.
ஓவியா ஆர்மி
சமூக வலைதளங்களில் இவரது ரசிகர்கள் 'ஓவியா ஆர்மி' என்ற பெயரில் ஒன்றிணைந்து ஓவியா புகழ்பாடி அவரைத் தொடர்ந்து காப்பாற்றி வந்தனர். மேலும் ஓவியாவின் நற்பண்புகளையும் பகிரத் தவறவில்லை.

சமூக வலைதளங்கள்
ஒரு கட்டத்தில் சமூக வலைதளங்கள் முழுவதுமே ஓவியா மயமாக காட்சி தந்தது. இதை அதிகப்படுத்துவது போல அவருடன் நடித்த நடிகர்கள், ஓவியாவை இயக்கிய இயக்குநர்கள் ஆகியோர் அவரின் நல்ல பண்புகளை பாராட்டி பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்தனர்.ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சிகளுக்கு ஓவியா அளித்த பேட்டிகள் தூசு தட்டப்பட்டு, இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அவை வைரலாகின.
ஆரவ்
ஆரவ் மீது கொண்ட காதல், சக போட்டியாளர்களின் நிராகரிப்பு காரணமாக நிகழ்ச்சியின் 41-வது நாள் தற்கொலை முயற்சி மேற்கொண்டு நிகழ்ச்சியை விட்டு ஓவியா வெளியேறினார்.

ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின் ரசிகர்கள் தன்மீது வைத்துள்ள அன்பைப் பார்த்து நெகிழ்ந்து போன ஓவியா, செல்பி வீடியோ ஒன்றை யூடியூபில் வெளியிட்டு ரசிகர்களின் அன்புக்கு நன்றி கூறினார். மேலும் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் கலந்து கொள்ள மாட்டேன் எனவும் உறுதியாக தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
3 டுவீட்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் மொத்தம் 3 டுவீட்களை மட்டுமே ஓவியா பதிவு செய்துள்ளார். இதில் தான் சிங்கிளாக இருப்பதாக ஓவியா போட்ட டுவீட் அவரது ரசிகர்கள் மத்தியிள் எக்கசக்கமான வரவேற்பைப் பெற்றது. சமீபமாக பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததும் ரசிகர்களுடன் சாட் செய்வேன் என அறிவித்துள்ளார்.

3 லட்சம்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன் சுமார் 5௦ ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த அவரது பாலோயர்களின் எண்ணிக்கை, தற்போது 3 லட்சங்களைக் கடந்துள்ளது. மேலும் டுவிட்டர் தளமும் ஓவியாவை அங்கீகரித்து அவருக்கு ப்ளு டிக் வழங்கியது.
மொத்தத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப்பின் ஓவியாவுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் சினிமாவில் கிடைத்து, அவரது வாழ்க்கையே தலைகீழாக மாறியுள்ளது என்றால் அது மிகையில்லை....
