#BREAKING தமிழ் சினிமாவுக்கு சோதனைக்காலம்.. ஆஸ்கருக்குப் போன ’கூழாங்கல்’ இணையத்தில் வெளியானது..
ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 'கூழாங்கல்' திரைப்படம் இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கூழாங்கல்'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ளனர்.
பிரபலமான சர்வதேச திரைப்பட விழாக்களில் 'கூழாங்கல்' திரையிடப்பட்டு விருதையும் வென்று வருகிறது. அந்த வரிசையில் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுப் போட்டிக்கும் 'கூழாங்கல்' படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த பெரும் கவுரவமாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'விசாரணை' படம் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்டிருந்தது .
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த சர்வதேசத் திரைப்படம் என்கிற பிரிவில் ஆஸ்கர் போட்டிக்கு இந்தியா சார்பில் ஒரு படம் பரிந்துரைக்கப்படும். இந்த படங்களை தேர்வு செய்ய இயக்குநர் ஷாஜி என்.கருண் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு உள்ளது. இந்த வருட போட்டியில் வித்யா பாலன் நடித்த ‘ஷெர்னி’, விக்கி கவுஷல் நடித்த ‘சர்தார் உதம்’, மலையாளத்தில் மார்ட்டின் ப்ரகத் இயக்கிய ‘நாயாட்டு’, தமிழிலிருந்து ‘மண்டேலா’, 'கூழாங்கல்' ஆகிய படங்கள் வரிசை கட்டின.
இந்த படங்களிலிருந்து 'கூழாங்கல்' படம் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் படக்குழுவுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
படத்தின் ரிலீஸ் குறித்து பிரபல தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்திருந்த அந்த படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் "இந்த ஆண்டு டிசம்பருக்குள் படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட நிறைய அழைப்புகள் வந்தன. ஆனால், படத்தை முதலில் தியேட்டருக்கு எடுத்துச் செல்லவே தான் விரும்புவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் கூழாங்கல்' திரைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.
ஆஸ்கார் விருது பெரும் படங்கள் கட்டாயம் இணையத்தில் வெளியாகி இருக்க கூடாது என்பது முக்கிய ரூலாக ஆஸ்கார் கொண்டுள்ளது. இவ்வாறு இருக்க இதுவரை திரையரங்குகளில் வெளியாகத 'கூழாங்கல்' இணையத்தில் கசிந்துள்ளது. இதனால் கூழாங்கல்' திரைப்படத்திற்கு சிக்கல் ஏற்படக்கூடும் என்கிற அச்சத்தில் படக்குழு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நல்ல படங்களுக்கு கிடைக்கும் அங்கிகாரம் இது போன்ற மோசமான செயல்களால் பின்னடைவை சந்திப்பது இயக்குனர்கள் மத்தியில் கலக்கத்தை உருவாக்கியுள்ளது.