இது மரணம் இல்லை... கொலை...! சாத்தான்குளம்சம்பவத்திற்காக கொந்தளித்த ப்ரியா பவானி - நிவேதா பெத்துராஜ் !
தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் சமீபத்தில் ஜெயராஜ், அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் பத்து நிமிடம் கடை திறந்து வைத்ததால், காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வணிக நிறுவனங்கள் கடைகள் என எதுவும் இரவு 8 மணிக்கு மேல் செயல்பட அனுமதி இல்லை. இந்த நிலையில் கடந்த 19ந் தேதி சாத்தான்குளம் பேருந்து நிலையம் அருகே கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதா? என்பதை காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உறுதி செய்ய வந்துள்ளார். அப்போது ஜெயராஜ் என்பவர் தனது செல்போன் கடையை மூடாமல் திறந்து வைத்திருந்தாக கூறப்படுகிறது. அப்போது கடையை உடனடியாக மூடுமாறு பாலகிருஷ்ணன், ஜெயராஜை கூறியுள்ளார்.
அப்போது ஜெயராஜுக்கும் எஸ்.ஐ. பாலகிருஷ்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் போலீசையே எதிர்த்து பேசுறீயா? எனக்கூறி, ஜெயராஜை சட்டையைப் பிடித்து இழுத்து காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ளார். இதைப்பார்த்த பென்னீஸ் ஏன் எங்க அப்பாவை இப்படி இழுத்து போறீங்க? என கேட்க அவரையும் காவல்நிலையம் வா எனக்கூறிவிட்டு சென்றுள்ளார். காவல் நிலையத்தில் வைத்து ஜெயராஜை போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த பென்னீஸ் தனது அப்பாவின் நிலையை பார்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உடனே அவரையும் போலீசார் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும், கோவில்பட்டி கிளை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கு முதலில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பென்னீஸ் மாரடைப்பால் உயிரிழந்தார். மறுநாள் அவரது தந்தை ஜெயராஜ் மரணமடைந்தார். காவல்துறையினர் நடத்திய தாக்குதலால் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சிபிஐ விசாரணைக்கோரியும், சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் கண்டன குரல்கள் ஒலித்து வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், 2 தலைமைக் காவலர்கள் மீது அலுவல் ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு திரைத்துறையினர் பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வரும் நிலையில் செய்திப் பிரிவில் வேலைக்கு சேர்ந்த முதல் நாள் எங்க chief சொன்னாரு, நம்மை சுற்றி அநீதி, பயங்கரங்கள் தினம் தினம் ஆயிரக்கணக்குல நடந்துகிட்டு தான் இருக்கு. ஆனால் வெகு சில சம்பவங்கள் தான் நம்ம பார்வைக்கு வரும். அப்படி வெளிச்சத்தை பார்க்கும் பயங்கர சம்பவங்கள், மாற்றத்தை ஏற்படுத்த, அதுபோல் இன்னொரு சம்பவம் நடக்காமல் தடுக்க ஒரு பாடமாக இருக்கனும். அது தான் நாம பாதிக்கப்பட்டவங்களுக்கு செய்யக்கூடியது. சாமானியர்களிடம் காட்டப்படும் அதிகாரத்தின் வீரியம், செல்வாக்கு நிறைந்த குற்றவாளிகளிடம் அடங்கிக்கிடகிறது. இது மரணம் இல்லை. கொலை. Suspension, transfer இதற்கான தண்டனை இல்லை. அரசாங்கமும் சட்டமும் எடுக்கப்போகும் நடவடிக்கை ஒரு குடும்பத்திற்கு மட்டும் இல்லை ஒட்டு மொத்த சாமானியர்களுக்குமான பதில் என்று கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து நடிகை, ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவம் என்னை பல நாட்கள் பாதிப்பு அடைய செய்தது. நான் இதுகுறித்து ஆழமாக யோசித்தேன். சரி, அது அமெரிக்கா.. நம்ம ஊரு எவ்வளவோ தேவலைன்னு நினைச்சேன். ஆனால் ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் ஆகியோர்களுக்கு நடந்த கொடுமையை கேள்விப்பட்ட பின்னர், மனிதாபிமானம் எங்கே என்ற கேள்வி எழுகிறது என தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.