nayanthara wrote letter to her fans and media
ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா, ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் 14 ஆண்டுகளுக்கும் மேலாகக் கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருக்கும் நயன்தாராவிற்கு கடந்த ஆண்டும் சிறப்பான ஆண்டாகவே இருந்துள்ளது. நயன்தாரா கடந்த ஆண்டு நடித்த அறம் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்ததோடு விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றது.

இந்நிலையில் , 2018 புத்தாண்டை முன்னிட்டு அவர் தனது ரசிகர்கள், விமர்சகர்கள், ஊடகத்துறையைச் சார்ந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “எனது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. உங்களால் நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்” என்று கூறியுள்ளார். அறம் திரைப்படம் பற்றி குறிப்பிட்டுள்ள அவர்,

“உங்களுடைய அன்பும் ஆதரவும் என்னை பொழுதுபோக்கு படங்கள் மட்டுமல்லாமல் ‘அறம்’ போன்ற சமூக பொறுப்புணர்வுமிக்க படம் பண்ணத் தூண்டுகிறது. பத்திரிகை, தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள், திரைபிரபலங்கள், விமர்சகர்கள் ஆகியோராலேயே அறம் வெற்றியடைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்தப் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் சிறப்பானதாக அமையட்டும். உங்கள் அனைவரது உள்ளத்தில் எனக்கும் ஒரு சிறு இடம் அளித்ததற்கு நன்றி” என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
