நடிகர் நாசரின் மகன் 16 நாட்கள் கோமா நிலையில் இருந்து மீண்ட பின்னர் அவர் மறக்காமல் இருந்த ஒரே பெயர் தளபதி விஜய் தான் என அவர் கூறி இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் நாசர். இவருக்கு ஃபைசல் என்கிற மகனும் உள்ளார். கேம் டிசைனரான இவர், விபத்தில் சிக்கியபோது படு காயம் அடைந்து கோமா நிலைக்கு சென்று, தீவிர சிகிச்சைக்கு பின்னரே மீண்டார். இந்த நிலையில், தன் மகன் கோமா நிலையில் இருந்து மீண்ட பின்னர் மறக்காமல் இருந்த ஒரே பெயர் நடிகர் விஜய் தான் என நாசர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.
இதுபற்றி அவர் பேசுகையில், “என் மகன் ஃபைசல் நடிகர் விஜய்யின் மிகத்தீவிரமான ரசிகர். அது விஜய்க்கும் தெரியும். அவரும் என் மகனை சந்தித்திருக்கிறார். என் மகன் ஒரு கேம் டிசைனர். சைவம் என்கிற கேமை அவன் தான் வடிவமைத்தான். அந்த வீடியோ கேம் ரிலீஸ் செய்த அடுத்த நாள் விபத்தில் சிக்கினான். அப்போது 14 நாட்கள் சுயநினைவின்றி கோமாவில் இருந்தான். அதன்பின்னர் சிங்கப்பூருக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்த பின்னர் மீண்டான்.
இதையும் படியுங்கள்... 2024-ஆம் ஆண்டில் பான் இந்தியா அளவில் தோல்வியை தழுவிய திரைப்படங்கள்!

கோமாவில் இருந்து மீண்ட பின்னர் அவன் அம்மா, அப்பானுலாம் சொல்லல... அவன் விஜய்னு தான் சொன்னான். அவனுக்கு விஜய் என ஒரு நண்பரும் இருக்கிறார். சரி அவரை தான் நினைவில் வைத்திருக்கிறார் என நினைத்தோம். உடனே அவனை வரவழைத்து அவன் முன் நிறுத்தினோம். அப்போது அவன் எந்தவித ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. என் மனைவி கமிலா ஒரு சைக்காலஜிஸ்ட் என்பதால், அவன் வேறு யாரையோ தேடுகிறான் என்று சொன்னார்.
பின்னர் தளபதி விஜய்யின் புகைப்படத்தை காட்டியதும் அவனது கண்கள் விரிவடைந்தது. உடனே இந்த விஜய்யை தான் அவன் சொல்லி இருக்கிறேன் என உணர்ந்தோம். அவனுக்கு விஜய்யின் நினைவு மட்டும் இருக்கிறது என்பதை அறிந்து மிகவும் சந்தோஷமாக இருந்தது. பின் அவனை குணப்படுத்த விஜய்யின் படங்களையும், பாடல்களையும் அவனுக்கு அதிகமாக காட்டத் தொடங்கினோம். அப்போது தான் அவனுக்கு மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்ப ஆரம்பித்தது.
ஒரு கட்டத்தில் இந்த விஷயம் விஜய்க்கே தெரிந்துவிட்டது. நான் உங்க மகனை வந்து பார்க்கலாமா என அவரே போன் பண்ணி கேட்டார். என் மனைவி பரவாயில்ல இருக்கட்டும் என சொன்னார். ஆனால் நான் ஃபைசலை கண்டிப்பாக பார்க்கனும்னு சொல்லி அவர் வந்தார். அதுவும் ஒருமுறை அல்ல, பலமுறை வந்து அவனை பார்த்திருக்கிறார். அவர் வந்ததும் அவங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு நாங்கள் அனைவரும் சென்றுவிடுவோம். அவர் என் மகன் உடன் சிறிது நேரம் பேசுவார். என் மகனுக்கு கிட்டார் பிடிக்கும் என தெரிந்ததும் ஒரு முறை பார்க்க வரும்போது ஒரு கிட்டாரை வாங்கிக் கொடுத்தார். என் மகன் ஃபைசலின் வாழ்க்கையில் விஜய் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறார்” என நெகிழ்ச்சியுடன் கூறினார் நாசர்.
இதையும் படியுங்கள்... விஜய் வந்தா நான் ஏன் எழுந்து நிற்கணும்; பல வருட சர்ச்சைக்கு பாலா அளித்த பளீச் பதில்
