இறுதி கட்டத்தை நெருங்கும் விருமன் ; மீண்டும் கிராமத்து நாயகனான பிரபல ஹீரோ...
கிராமத்து பின்னணியில் உருவாகி வரும் விருமன் திரைப்படம் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2013 ஆம் ஆண்டில் குட்டிப் புலி படத்தை இயக்கியதன் மூலம் திரை பிரபலமானார் முத்தையா. இதை தொடர்ந்து கிராம ஆக்சன் படங்களாக வெற்றி பெற்ற கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். பொதுவாக சமூகம் சார்ந்த படங்களை படைக்கும் இயக்குனர் என பெயர் பெற்றவர் முத்தையா.
முத்தையா இயக்கத்தில் 2015 ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான கொம்பன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 6 வருடம் கழித்து மீண்டும் இணைந்துள்ள முத்தையா -கார்த்தி கூட்டணியில் மீண்டும் கிராமத்து கதாநாயகன் சார்ந்த கதை களம் உருவாகிறது.
கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் இந்த படத்திற்கு "விருமன்" என பெயரிடப்பட்டுள்ளது. ஜெய் பீமை தொடர்ந்து கார்த்தியின் விருமன் படத்தை சூர்யா தயாரிக்கிறார். இதன் இசை பணிக்காக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமிக்கியுள்ளார். மதுரை, தேனி என தற்போது பிஸியாக நடைபெற்று வரும் இந்த படத்தின் கலை இயக்குனராக அசுரன் புகழ் ஜாக்கி பணியாற்றி வருகிறார். கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கும் இதில் ராஜ்கிரண்,சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர்.
படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்களையும், திரையுலக ஆர்வலர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கார்த்தி முழுக்க முழுக்க கிராமிய ஆக்ஷன் படத்தில் நடிப்பது சுவாரஸ்யத்தை மேலோங்க செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, கார்த்தி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விருமன் படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடந்து வருவதாக ஒரு புதுப்பிப்பைப் பகிர்ந்து கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் அடுத்த ஆண்டு திரை காண உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.