“எஸ்.பி.பி.யின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும்”... அமைச்சர் கடம்பூர் ராஜூ விருப்பம்...!
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
கொரோனா தொற்றுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கடந்த 14ம் தேதி முதலே கவலைக்கிடமான நிலையில் இருந்து. இதையடுத்து பாடும் நிலா எஸ்.பி.பி. நலம் பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமென நேற்று மாலை 6 மணிக்கு தமிழகம் முழுவதும் திரையுலகினர், இசைப்பிரியர்கள், ரசிகர்கள், சாமானிய மக்கள் என லட்சக்கணக்கானோர் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கையில் மெழுகுவர்த்தி ஏந்திய படி தமிழக தெருக்களில் சிறியவர் முதல் பெரியவர் வரை பிரார்த்தனை செய்தனர். அதன் பலனாக இன்று மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. எக்மோ மற்றும் செயற்கை சுவாசக் கருவிகள் மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ரு வருவதாகவும், மருத்துவ நிபுணர் குழுவினர் எஸ்.பி.பி. உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் ஆயிரம் நிலவே வா பாடல் மூலமாக பிரபலமானவர் எஸ்.பி.பி. அவரது குரலுக்கு மயங்காதவர்கள் கிடையாது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எஸ்.பி.பி. சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கே சென்று அவருடைய உடல் நிலை குறித்து கேட்டறிந்துள்ளார். உரிய சிகிச்சை அளிக்கவும் வலியுறுத்தியுள்ளார். அவர் நலம் பெற்று மீண்டு வந்து அவரது குரல் தமிழகம் முழுவதும் ஒலிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என தெரிவித்துள்ளார்.