இந்த மாவட்டங்களில் மட்டும் தியேட்டர்களை திறக்க அனுமதி?... மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை...!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மட்டும் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலையைக் கட்டுப்படுத்தும் விதமாக தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 5ம் தேதியுடன் நிறைவடைகிறது. கொரோனா பாதிப்புக்கு ஏற்ப மொத்தமுள்ள மாவட்டங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு அதற்கேற்றவாறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இருப்பினும் பள்ளி, கல்லூரி திறப்பு, சில மாவட்டங்களில் பொது போக்குவரத்திற்கு அனுமதி, தியேட்டர்கள் திறப்பு ஆகியவற்றிற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது குறித்தும், 3-ம் வகையில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மட்டும் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.