வீட்டில் நிகழ்ந்த எதிர்பாரா மரணம்!! கொரோனா பாதிப்பால் இறுதிச்சடங்கில் கலந்துக்க முடியாமல் மகேஷ் பாபு தவிப்பு
நீண்ட காலமாக கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த மகேஷ் பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
டோலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில், இவரது வீட்டில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரது அண்ணம் ரமேஷ் பாபு நேற்று மரணமடைந்தார். இவர் கடந்த 1974-ம் ஆண்டு வெளிவந்த ‘சீதாராம ராஜு’ என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து 15 படங்களில் மட்டுமே நடித்த அவர், கடந்த 1997-ம் ஆண்டுக்குப் பின் நடிப்புக்கு முழுக்கு போட்டு படத் தயாரிப்பில் இறங்கினார். இவர் தயாரிப்பில் ‘அர்ஜுன்’, ‘அதிதி’ ஆகிய 2 படங்களில் மகேஷ் பாபு நடித்திருந்தார்.
நீண்ட காலமாக கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த ரமேஷ் பாபு, இதற்காக சிகிச்சையும் மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ரமேஷ் பாபு காலமானார். அவருக்கு வயது 56. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக குவாரண்டைனில் இருப்பதால், தனது அண்ணனின் இறுதிச்சடங்கில் மகேஷ் பாபுவால் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தனது அண்ணனின் மறைவு குறித்து மகேஷ் பாபு வெளியிட்டுள்ள உருக்கமான அறிக்கையில், “நீங்க தான் எனக்கு உத்வேகம். நீங்க தான் எனக்கு பலம். நீங்க தான் எனக்கு தைரியம் கொடுத்தீர்கள். நீங்க தான் எனக்கு எல்லாம். நீங்க இல்லாம நான் இல்ல. எனக்கு செய்த அனைத்துக்கும் நன்றி. இப்போ ஓய்வெடுங்கள். இந்த வாழ்க்கை மட்டுமல்ல இன்னொரு வாழ்க்கை கிடைத்தாலும் நீங்க தான் எனக்கு அண்ணன். என்றும், என்றென்றும் உங்களை நேசிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.