Actor Vishnu Prasad Passed Away: கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல சினிமா-சீரியல் நடிகர் விஷ்ணு பிரசாத் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்து பிரபலமானவர் சீரியல் நடிகர் விஷ்ணு பிரசாத். கடந்த சில வருடங்களாகவே கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் (நேற்று) வியாழக்கிழமை அன்று நள்ளிரவு உடல்நிலை மிகவும் மோசமடைந்து மரணமடைந்தார். இந்த தகவலை, நடிகர் கிஷோர் சத்யா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில் அவர்"ஒரு சோகச் செய்தி" என்று பதிவிட்டுள்ளார். எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஷ்ணு பிரசாத் உயிரிழந்ததாகவும், இவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே வெளியான தகவலில், விஷ்ணு பிரசாத்தின் சிகிச்சைக்கு சுமார் 30 லட்சம் ரூபாய் செலவாகும் என்று நடிகர் கிஷோர் சத்யா ஏசியா நெட் நியூஸ் (மலையாளம்) ஆன்லைன் தளத்துக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும் மலையாள சீரியல் கலைஞர்களின் சங்கமான ஆத்மாவிலிருந்து நடிகருக்கு நிதி உதவி வழங்கப்படும் என்றும் கிஷோர் சத்யா தெரிவித்திருந்தார்.

சினிமா நடிகர்களின் சங்கமான அம்மாவிலும் விஷ்ணு பிரசாத் உறுப்பினராக உள்ளார். அம்மாவிலிருந்து ஏதேனும் நிதி உதவி கிடைக்குமா என்பது தனக்குத் தெரியாது என்றும் கிஷோர் சத்யா சில நாட்களுக்கு முன்பு கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் விஷ்ணு பிரசாத். வில்லன் வேடங்களில் நடித்து பலருக்கும் பரிச்சியமானவர். இவருடைய திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என கூறப்படுகிறது.