மீண்டும் நடிக்க வந்த முன்னாள் முதலமைச்சரின் மனைவி ! அதிரடியாக களமிறங்கினார் !!
தமிழில் இயற்கை படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி பின்னர் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியைத் திருமணம் செய்து கொண்ட குட்டி ராதிகா தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் இயற்கை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை குட்டி ராதிகா. தாஸ்தோவெஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ நாவலை மையமாக வைத்து இயக்கப்பட்டிருந்த இந்தப் படத்தில் ஷாம் மற்றும் அருண் விஜய் என 2 ஹீரோக்கள் நடித்திருந்தார்கள்.
தமிழுக்கு வருவதற்கு முன்பே கன்னடப் படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து, பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார் குட்டி ராதிகா. மேலும் பல நல்ல கதைகளில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், தவறான கதைத் தேர்வுகளால் ராதிகாவால் தொடர்ந்து ஜொலிக்க முடியவில்லை.
ராதிகாவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, 2000-ல் அதாவது அவரின் 14 வயதிலேயே ரதன் குமார் என்பவரை மணம் முடித்திருந்தார். ராதிகாவின் திருமண செய்தி, அவரது ‘கரியரை பாதிக்கக்கூடும்’ என்பதால், மகள் ராதிகாவை அவரது தந்தை தேவராஜ் கடத்தியதாக 2002-ல் புகார் அளித்தார் ரதன் குமார்.
சில நாட்களுக்குப் பிறகு, ராதிகாவுக்கு வெறும் 14 வயது என்பதால் இந்தத் திருமணம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், ரதன்குமார் தன் மகளை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டார் என்றும் ராதிகாவின் தாயார் கூறினார். அதோடு ராதிகாவை உயிரோடு எரிக்க ரதன் முயன்றதாகவும் தேவராஜ் குற்றம் சாட்டினார். இதற்கிடையே ஆகஸ்ட் 2002-ல் மாரடைப்பால் ரதன் குமார் இறந்தார்.
பின்னர், 2010 நவம்பரில் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் ஹெ.டி.குமாரசாமியுடனான தனது திருமணம் குறித்த விஷயத்தை வெளியுலகுக்கு தெரியப்படுத்தினார் ராதிகா. தங்களின் திருமணம் 2006-ல் நடந்தது எனவும் அதில் ராதிகா குறிப்பிட்டிருந்தார். ராதிகா – குமாரசாமி தம்பதிக்கு ஷாமிகா என்ற மகளும் உள்ளார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் குட்டி ராதிகா. இயக்குநர் நவரசன் இயக்கியுள்ள, ‘தமயந்தி’ என்ற ஹாரர் த்ரில்லர் படத்தில் தற்போது அவர் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது. அதோடு இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங்கும் செய்யப்படுகிறது.