Raj Mohan : உடல்நலக்குறைவால் மரணமடைந்த பழம்பெரும் நடிகரின் உடலை வாங்க குடும்பத்தினர் முன்வராதது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள திரையுலகில் நடிகராக வலம் வந்தவர் ராஜ் மோகன். இவர் கடந்த 1967ம் ஆண்டு வெளியான இந்துலேகா என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தை கலா நிலையம் கிருஷ்ணன் நாயர் என்பவர் இயக்கி இருந்தார். இதன்பின்னர் ஏராளமான மலையாள படங்களில் நடித்து பிரபலமான நடிகராக வலம் வந்தார்.

இயக்குனர் கலா நிலையம் கிருஷ்ணன் நாயரின் மகளை திருமணம் செய்துகொண்ட ராஜ் மோகன், பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தார். விவாகரத்துக்கு பின்னர் ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்தார் ராஜ் மோகன். அங்கு 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த இவர், கடந்த ஜூலை 4-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்...ஓசி திருமணத்தால் பிரச்சனையில் சிக்கிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்..! ஆப்பு வைத்ததா நெட்பிளிக்ஸ்?

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிறன்று உயிரிழந்தார். இவருக்கு வயது 90. இதையடுத்து அவரது மரணம் குறித்து உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டும், அவர்கள் யாரும் உடலை வாங்க முன்வரவில்லையாம்.

இதனால் இரண்டு நாட்களாக சவக்கிடங்கிலேயே ராஜ் மோகனின் உடல் வைக்கப்பட்டு இருந்தது. இந்த விஷயம் கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் வாசவனுக்கு தெரியவந்ததை அடுத்து, அவர் ராஜ் மோகனின் உடலை அரசு சார்பில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தார். இதன்பின்னர் நேற்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. 

இதையும் படியுங்கள்...சித்ரா அனுபவித்த டார்ச்சரை அம்பலப்படுத்தியதால் கொலை மிரட்டல் - ஹேம்நாத் மீது நண்பர் பரபரப்பு புகார்