‘நான் தமிழன் என்று சொல்லிக்கொள்வதெல்லாம் ஒரு தகுதியா?’...மகளிர் தினத்தில் கொதிக்கும் கமல்...
‘தமிழன் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வதெல்லாம் ஒரு தகுதியே இல்லை. திறமை இல்லாத, அதே சமயத்தில் நான் தமிழன் அதனால் எனக்கு ஓட்டுப்போடுங்கள்’ என்று கேட்பவர்களுக்கு வாக்களிக்காதீர்கள்’ என்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன்.
‘தமிழன் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வதெல்லாம் ஒரு தகுதியே இல்லை. திறமை இல்லாத, அதே சமயத்தில் நான் தமிழன் அதனால் எனக்கு ஓட்டுப்போடுங்கள்’ என்று கேட்பவர்களுக்கு வாக்களிக்காதீர்கள்’ என்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன்.
இன்று காலை நடிகை கோவை சரளா கமல் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட பிறகு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
"ஒரு செயலை நாம் செய்யும்போது கிண்டலடித்தனர். ஆனால், நம் செயல்கள் வெற்றி பெற்ற பிறகு 'நாங்கள் தான் அதனைச் செய்ய ஆரம்பித்தோம். அதற்குள் அவர் செய்துவிட்டார்' என்கின்றனர். அதைத்தான் வழக்கமாகச் செய்கின்றனர். அவர்கள் ஏற்கெனவே செய்ததை நாம் செய்வதாகச் சொல்கின்றனர்.
நல்லது ஏற்கெனவே உலகத்தில் இருக்கிறது. அதை நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதைத் தேடாத 20-35 ஆண்டு காலத்தை தமிழகம் கடந்துவிட்டது. அதை மாற்றி அமைக்க வேண்டும். யாராவது வர மாட்டார்களா என கேட்கக் கூடாது. அப்படித்தான் நானும் காத்துக்கொண்டிருந்தேன். அதற்கு நாம் தான் வர வேண்டும். புரட்சி உங்களிடம் இருந்துதான் தொடங்குகிறது. நாம் தொண்டர்களை பார்த்துப் பேசவில்லை, தலைவர்களைப் பார்த்துப் பேசுகிறோம்.
'நான் தமிழன்' என்பதற்காக வாய்ப்பு கேட்காதீர்கள், தகுதியைச் சொல்லி வாய்ப்பு கேளுங்கள். தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். தமிழன் என சொல்லி வாய்ப்பு கேட்பதும் குடும்ப அரசியல்தான். திறமையில்லாமல் தமிழனாக இருப்பவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டியதில்லை. எங்கு, யாரை வைக்கிறீர்கள் என்பது முக்கியம்" என்றார் கமல்.