"இனி விபத்து நடந்தால்"... லைகாவிற்கு கமல் ஹாசன் போட்ட கன்டிஷன்...!
இனி படப்பிடிப்பு தளத்தில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதன் முழுபொறுப்பையும் தயாரிப்பு நிறுவனம் ஏற்க வேண்டும் என்றும் கமல் ஹாசன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 19ம் தேதி இரவு ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2' படத்தின் ஷூட்டிங், சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடைபெற்று கொண்டிருந்தது. இரவு சுமார் 9 மணி அளவில் சண்டைக்காட்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அப்போது பகல் போன்ற வெளிச்சம் ஏற்படுத்துவதற்காக ராட்சத கிரேன் அந்த இடத்தில் அமைக்கப்பட்ட இருந்தது. அப்போது ராட்ச கிரேன் திடீரென அறுந்து விழுந்ததில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மதுசூதனராவ் , ஆர்ட் உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
திரையுலகையே உலுக்கிய இந்த கோர விபத்திற்கு கிரேன் பாராம் தாங்காமல் அறுந்து விழுந்ததே காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து படப்பிடிப்பின் போது போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததாக கூறி அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா மீதும், கிரேன் ஆபரேட்டர் ராஜன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் ஆபரேட்டர் ராஜனுக்கு அம்பத்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்த கோர விபத்து குறித்து வழக்கு மத்திய குற்றப்புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து நடிகர் கமல் ஹாசன் இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என லைகா நிறுவனத்திற்கு வலியுறுத்தியுள்ளார்.
பாதுகாப்பை உறுதி செய்த பிறகே படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என்றும், இனி படப்பிடிப்பு தளத்தில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதன் முழுபொறுப்பையும் தயாரிப்பு நிறுவனம் ஏற்க வேண்டும் என்றும் கமல் ஹாசன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.