மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை கவராத காரணத்தினால் அந்த படத்தை விநியோகம் செய்தவர்களுக்கு சுமார் 30 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை கவராத காரணத்தினால் அந்த படத்தை விநியோகம் செய்தவர்களுக்கு சுமார் 30 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கமல் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த படத்தின் 2ம் பாகமாக விஸ்வரூபம் 2 கடந்த வெள்ளியன்று வெளியானது. படத்தின் சொதப்பலான கிராபிக்ஸ் காட்சிகள். புரியா மொழி போன்ற காரணங்களால் விஸ்வரூபம் 2 பி மற்றும் சி கிளாஸ் ரசிகர்களை கவரவில்லை.

அதிக வன்முறை காரணமாக ஏ கிளாஸ் ரசிகர்களில் சிலரும் கூட விஸ்வரூபம் 2 சரியில்லை என்றே ட்விட்டரில் பதிவிட்டனர். இந்த காரணங்களால் திங்கட்கிழமையுடன் விஸ்வரூபம் 2 திரைப்படத்தை பி மற்றும் சி சென்டர் திரையரங்குகள் திருப்பி அனுப்பிவிட்டன. சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மட்டுமே தொடர்ந்து விஸ்வருபம் 2ஐ ஒளிபரப்பி வருகின்றன.

தமிழில் மட்டும் அல்லாமல் இந்தியிலும் விஸ்வரூபம் 2 விஸ்வரூப் 2 என்ற பெயரில் வெளியானது. தமிழை விட இந்தியில் படம் மிகப்பெரிய தோல்வி என்று கூறப்படுகிறது. படத்தை விநியோகம் செய்த ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு சுமார் 30 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் இழப்பு எவ்வளவு என்பதை அதிகாரப்பூர்வமாக ரிலையன்ஸ் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல தமிழகத்திலும் பி மற்றும் சி சென்டர்களில் படத்தை வெளியிட்ட டிஸ்ட்ரிப்யூட்டர்கள் கையை பிசைந்து வருகின்றனர். வெளிநாடுகளில் மட்டும் ஓரளவிற்கு கமல் படம் என்பதால் லாபம் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.