jungle sentiment trends in kollywood
’கோ க்ரீன்’ என்று பாரம்பரியத்தை நோக்கி ஓட ஆரம்பித்திருக்கிறது இந்தியா. ராகி தோசை, நாட்டு மாட்டுப்பால், பால்கனியில் வளரும் பயிர்கள் என்று மக்களின் வாழ்க்கை பழைய ஸ்டைலுக்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கிறது.
”லிட்ரேச்சர் ரிஃப்ளெக்ட்ஸ் லைஃப்” அதாவது சமகால வாழ்க்கையை பிரதிபலிப்பதுதான் இலக்கியம் என்பார்கள். அந்த வகையில் இலக்கியத்தின் ஒரு வடிவமான சினிமாவும் கதைக்களம் மற்றும் கதைக்கரு ரீதியில் பழைய கால விஷயங்களை நோக்கி விறுவிறுவென திரும்ப ஆரம்பிக்கிறதோ!
கடம்பன், வன மகன் என்று வனங்கள் மற்றும் நாகரீகத்தின் நாக்கு தீண்டாத பழங்குடி மக்களின் வாழ்வியலை படமாக்கும் திரைப்படங்கள் வரிசைகட்டி வர துவங்கியுள்ளன. இந்த போக்கிற்கு பிள்ளையார் சுழி போட்டது கும்கி திரைப்படம்தான்.

பேராண்மை திரைப்படம் என்னதான் ராக்கெட் ஏவுதல் மற்றும் ஆயுத வளர்ச்சிகளையெல்லாம் காட்சிப்படுத்தி இருந்தாலும் அதன் கதைக்களம் வனமாகதான் இருந்தது. பழங்குடி இனத்து இளைஞனின் வீரத்தையும், ஈரத்தையும்தான் காட்சிப்படுத்தி இருந்தது.
இந்த இரண்டு திரைப்படங்களையும் தொடர்ந்து சில இயக்குநர்கள் வனத்தை கதைக்களமாக எடுத்து கையாள துவங்கிவிட்ட நிலையில் கும்கியின் பார்ட் 2 வை எடுக்க பிரபுசாலமனும், பேராண்மையின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஜனநாதனும் விவாதத்தில் இறங்கிவிட்டதாக தகவல்.
காட்டை கதைகளமாக கொண்ட கடம்பன் பாக்ஸ் ஆபீஸில் பதுங்கி முன்னேறி வரும் நிலையில், ஏ.எல்.விஜய்யின் ‘வனமகன்’ நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இந்த படத்திற்காக உலகத்திலுள்ள அழகான மற்றும் அடர்வான காடுகளை தேடித்தேடி பிடித்து படமாக்கி இருக்கிறோம் என்கிறார் இயக்குநர்.

கும்கியும், பேராண்மையும் சூப்பர் டூப்பர் ஹிட். ஹிட்டே இல்லாமல் சறுக்கி வந்த ஆர்யாவுக்கு காட்டை மையப்படுத்திய கடம்பன் நல்லாவே கைகொடுத்து தெம்பாக்கி இருக்கிறது.
ஆக காட்டை மையப்படுத்தி படம் எடுத்தால் நிச்சயம் வெற்றிதான், வசூல்தான் எனும் செண்டிமெண்ட் வேறு தமிழ் சினிமாவை ஆட்கொள்ள ஆரம்பித்திருப்பதும் நல்ல விஷயமே.
ஆனால் இந்த நேரத்தில் ஒரே கவலை...காட்டை வெச்சு படமெடுக்கிறேன் பேர்வழின்னு அடிக்கடி உள்ளே போயி, அமைதி குந்திகினு இருக்கிற அந்த ஒரே இடத்தையும் கலீஜ் ஆக்கி காலி பண்ணிடுவாங்களோ அப்படிங்கிறதுதான்.
எது எப்படியோ! வனத்தை நம்பினோர் கைவிடப்படார் ராசா.
