இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களாக வலம் வரும் கரண்ஜோஹர், கௌரி கான் உள்ளிட்டோரின் சொத்து மதிப்பை விட அதிக சொத்துக்களை வைத்திருக்கும் தயாரிப்பாளர் யார் தெரியுமா?

கலாநிதி மாறனின் சன் குழுமம் சன் பிக்சர்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கியது. 2010-ம் ஆண்டு முதல் இந்நிறுவனம் படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் சன் பிக்சர்ஸ் தயாரித்த முதல் படம் எந்திரன். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் மூலம் முதல் படத்திலேயே நல்ல லாபத்தை பெற்றது சன் பிக்சர்ஸ் நிறுவனம். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதை தொடர்ந்து விஜய்யின் சர்க்கார், பேட்ட, நம்ம வீட்டு பிள்ளை, பீஸ்ட், ஜெயிலர் என பல படங்களை தயாரித்துள்ளது. இதில் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் கிடைத்தாலும், அது வசூல் ரீதியில் வரவேற்பை பெற்றதால் அது சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு லாபகரமான படமாகவே அமைந்தது. மேலும் பல படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.

குறிப்பாக கடந்த ஆண்டு ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்தது. ரூ. 200 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் ரூ.650 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் மூலம் இந்தியாவின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அதிக லாபத்தை கொடுத்த படம் என்றால் அது ஜெயிலர் தான்.

ஜெயிலர் படத்தின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு சன் பிக்சர்ஸ் தான் முதன்மை காரணம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்தாலும், 1993-ல் கலாநிதி மாறன் சன் டிவி என்ற சேட்டிலைட் சேனலை தொடங்கினார். மேலும் தென்னிந்தியா முழுவதும் தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் டிவி சேனல்களை தொடங்கினார். இதை தொடர்ந்து சன் குழுமம் அசுர வளர்ச்சியை அடைந்தது. இப்படி சன் குழுமம் என்ற மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்துள்ளார் கலாநிதி மாறன். 

இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார தயாரிப்பாளர் என்ற பெருமையை கலாநிதி மாறன் பெற்றுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களாக வலம் வரும் கரண்ஜோஹர், கௌரி கான் உள்ளிட்டோரின் சொத்து மதிப்பை விட அதிக சொத்துக்களை கலாநிதி மாறன் வைத்திருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு ரூ.29,100 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பணக்கார தயாரிப்பாளர் என்ற பெருமையை தமிழ்நாட்டை சேர்ந்த கலாநிதி மாறன் பெற்றுள்ளார்.

தனுஷ் இயக்கி உள்ள ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் அடுத்த மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து ரஜினி - லோகேஷ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.