கலைஞர் வீட்டிலிருந்து புறப்பட்ட கால்பந்து வீரன்... குஷியில் உடன்பிறப்புகள்!
நெரோகா அணியின் வீரர்கள் தேர்விற்கான ட்ரையல்ஸில் இன்பன் உதயநிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தாத்தாவைப் போல் அரசியல்வாதியாகவோ, அப்பாவைப் போல் நடிகராகவோ மாற விரும்பாமல் விளையாட்டு வீரனாக உருவெடுத்துள்ள இன்ப நிதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த நெரோகா கால்பந்து அணிக்கு விளையாட முதல்வர் மு.க.ஸ்டாலினின் பேரனும், உதயநிதியின் மகனுமான இன்பநிதி தேர்வாகியுள்ளார்.
இந்தியன் ஐ-லீக் கால்பந்து தொடர் கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்றது. இந்தியாவின் மிக முக்கியமான கால்பந்து தொடர் இதுவாகும். இதில் தற்போது 21 கிளப் அணிகள் உள்ளன. தற்போது அடுத்த ஐ-லீக் தொடருக்கான வீரர்கள் ஒப்பந்தம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நெரோகா எஃப்சி என்ற கால்பந்து அணியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேரனும், எம்.எல்.ஏ. மற்றும் பிரபல நடிகரான உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பன் உதயநிதியை ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அந்த கால்பந்து நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், நெரோகா அணியின் வீரர்கள் தேர்விற்கான ட்ரையல்ஸில் இன்பன் உதயநிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்பன் உதயநிதி கால்பந்து விளையாட்டில் டிஃபெண்டராக இருந்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள மேக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.